புஷ்கலா தேவியை மணம் முடித்த ஆரியங்காவு தர்மசாஸ்தா... பக்தர்கள் தரிசனம்
கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை: கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சுவாமி ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சாரியாகவும் குளத்துப்புழையில் பாலகனாகவும் இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அச்சன்கோவிலிலும் காட்சி தருகிறார்.
கோவில் கேரளா பாணியில் இருந்தாலும் அங்கு நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் ஆரியங்காவு ஐயப்பன் திருமணம் முடித்தது மதுரை பெண்ணான புஷ்கலா தேவியை.
ஐயப்பன் மீது அன்பு
திருவிதாங்கூர் மன்னனுக்கென பட்டாடைகளை நெய்த நெசவு வியாபாரி, தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துக்கொண்டு பயணம் செல்கிறார். காட்டு வழியில் பெரும் ஆபத்து என்பதால், ஆரியங்காவு சாஸ்தா கோயில் அர்ச்சகரின் வீட்டில் மகளை பாதுகாக்கும்படி ஒப்படைத்துச் செல்கிறார். மலர்களை பறித்து ஐயப்பனுக்கு மாலை தொடுத்த புஷ்கலா, நாளடைவில் ஐயப்பன் மீது அபரித அன்பு கொள்கிறார்.
மாயமான தர்மசாஸ்தா
மன்னரிடம் ஆடைகளைக் கொடுத்து விட்டு நெசவாளியான வியாபாரி திரும்புகிறார். அப்போது, காட்டில் மத யானை ஒன்று, வியாபாரியைத் தாக்க வருகிறது. அப்போது ஒரு இளைஞர் யானையிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார். அந்த இளைஞரிடம், என்ன வேண்டுமோ கேள் என்கிறார் வியாபாரி. அதற்கு அவர், உங்கள் பெண்ணை திருமணம் செய்து தருகிறீர்களா? என்றதும், வியாபாரியும் சம்மதம் தெரிவிக்கிறார்.
ஐயப்பன் - புஷ்கலாதேவி
உடனே அந்த இளைஞர் திடீரென மாயமாகி விடுகிறார். குழப்பத்துடனேயே ஆரியங்காவு திரும்பிய அந்த வியாபாரி, ஐயப்பனாக கருவறையில் கோயில் கொண்டிருப்பது, தன்னை மத யானையிடமிருந்து காப்பாற்றிய இளைஞர் வடிவில் இருப்பது கண்டு சிலிர்க்கிறார். ஐயப்பனே நேரில் எழுந்தருளி புஷ்கலாவை கரம் பிடித்தார் என்கிறது புராணம். இதனை நிரூபிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது.
சௌராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை
திருவாங்கூர் மன்னர், தேவசம் போர்டார், சௌராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கௌரவப்படுத்துகின்றனர். சௌராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறையில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.
ஜோதிக்கு வரவேற்பு
இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்த ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23ம் தேதி ஜோதி ரூப தசிசனம் நடைபெற்றது. அன்று அதிகாலையில் அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் ஆரியங்காவு மக்கள் ஜோதிக்கு வரவேற்பு அளித்தல், இரவ அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பகவதி புஷ்கலா தேவி
மாம்பழத்துறையில் இருந்து பகவதி புஷ்கலா தேவிக்கு நறுமணப் பொருட்களால் மகாஅபிகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மணமகளுக்குரிய சர்வ அலங்காரம், பொங்கல் படைப்பு உற்சவம் நடைபெற்றது. அம்மன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து அம்பாள் ஜோதி ரூபத்தை தந்திரி, சௌராஷ்டிரா சமூகத்தினரிடம் வழங்கினார். சன்னதி சந்திரி ஜோதி ரூபத்தை பூஜை வழிபாடு செய்து கர்ப்பகிரகத்தில் கொண்டு சென்று ஐயப்பனின் ஜோதியோடு ஐக்கியமாக்கினார்.
திருமண நிச்சயம்
கடந்த 24ம் தேதி பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், சன்னிதானம் முன் துவங்கியது. இதில் அம்பாள் சார்பில் சௌராஷ்டிராவினர் 21 தட்டுகளில் நிச்சயதார்த்த சடங்குகளுக்க உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர். தர்மசாஸ்தா சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டார் 3 தட்டுகளை கர்ப்ப கிரகத்தில் இருந்து எடுத்து வந்து ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மணம் முடித்த ஐயப்பன்
தர்மசாஸ்தா ராஜ அலங்காரத்தில் பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திங்கட்கிழமை காலையில் அபிஷேம், வஸ்திரங்கள் சாத்துப்படி, பொங்கல் படைப்பு, மதியம் சம்பந்தி விருந்து, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
வாணவேடிக்கை
இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமுதாயத்தினரூம், ஆரியங்காவு கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.