மருமகன் பழனி முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - எடப்பாடி பருவதராஜ குலத்தினரின் வழிபாடு
திருச்செந்தூர் முருகனை மீனவ மக்கள் எப்படி மாப்பிள்ளை சாமி என்ற அழைக்கிறார்களோ அதே போல பழனி முருகனை எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் மருமகன் என்கிறார்கள். வள்ளியை மணம் முடித்த மருமகனுக்கு தை
பழனி: பழனி முருகன் கோவிலில் தைப்பூச பெருவிழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தேரோட்டமும் தெப்பத்திருவிழாவும் முடிந்த களைப்பில் முருகன் இருக்க எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் ஆயிரக்கணக்கான காவடிகளுடன் வந்து பல டன் பஞ்சாமிர்தம் செய்து குளிர குளிர அபிஷேகம் செய்து மருமகனை குளிர்வித்துள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமான் எப்படி மருமகன் அக முடியும் என்று கேட்கிறீர்களா? திருச்செந்தூர் முருகன் மீனவப்பெருமக்களுக்கு மாப்பிள்ளை சாமி, அதே போலத்தான் எடப்பாடி மக்களுக்கு முருகப்பெருமான் மருமகன் சாமி.
பழனி மலை முருகனை தரிசிக்க செல்பவர்கள் மாலையில் கீழிறங்கி விட வேண்டும். ஆனால் எடப்பாடி பருவதராஜ குல மக்கள் மட்டும்தான் விடிய விடிய தங்கியிருந்து பல ஆயிரம் கிலோ பஞ்சாமிருதம் தயாரித்து வழிபடுகின்றனர். மலையை மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அமர்களப்படுத்துகின்றனர்.
இந்த ஆண்டு தைப்பூசம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா உடன் நிறைவடைந்தது. பிப்ரவரி 13ஆம் தேதி பழனிக்கு வந்த எடப்பாடி மக்கள் 10 டன் மலை வாழைப்பழம், 10 டன் சர்க்கரை, 900 கிலோ பேரீட்சை, 75 கிலோ கற்கண்டு, 20 டின்களில் நெய், தேன், ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். நேற்று இரவு மலைக் கோயிலில் தங்கியிருந்து பஞ்சாமிர்தத்தை முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பருவத ராஜகுல காவடி
பழனி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் சிறப்பானது. கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழனி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
பாதயாத்திரை
சேலம் மாவட்டம் வலசைபழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, க.புதூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர் 250 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாக வந்தனர். எடப்பாடி மக்களின் பாதயாத்திரையின்போது அவர்களுடன் முருகனும் சேர்ந்து பயணிப்பதாகவும் நம்பிக்கை.சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில் காவடி, இளநீர் காவடிகளுடன் காவிநிற ஆடை அணிந்து உற்சாகமாக வந்தனர். மலைக்கோயிலில் தங்கி சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மருமகனுக்கு விரதம்
பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும் எடப்பாடி கிராம மக்கள் பாதயாத்திரைக்கான காப்பு கட்டி, விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த கிராமமே விரதமிருப்பர். பழனி ஆண்டவரைத் தரிசித்து, வீடு வந்து சேர்ந்ததும் படையல் போட்டப் பிறகுதான் அவர்களின் விரதம் நிறைவு பெறும். அந்தளவுக்குப் பக்தியுடன் விரதம் இருந்து தன் மருமகனை வழிபடுகிறார்கள் எடப்பாடி மக்கள்.
விபூதி படையல்
ஆயிரக்கணக்கான எடப்பாடி மக்கள் சர்க்கரைக் காவடி, கரும்புக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என்று விதவிதமான காவடியெடுத்து பெருங்கொண்டாட்டத்துடன் பழனி மலையை அடைந்தனர். படி பூஜை செய்து வழிபட்டனர். மலையில் தங்கியிருந்த மக்கள் ஓம் சரவண பவ என்று
மலர்களால் அலங்காரம் செய்தனர். விபூதி படையல் போட்டு அரோகரா என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மலை முழுவதும் எதிரொலித்தது.
பழனி முருகனுக்கு பஞ்சாமிர்தம்
வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள். நோய் தீர்க்கும் பிரசாதமாக பழனி மலை விபூதியை கொண்டாடுகின்றனர். உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டால் முருகனை நினைத்து திருநீறு பூசினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான்தான் இவர்களுக்கு குல தெய்வம். தெய்வமாக பார்ப்பதை விட மருமகனாக பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்திருக்கிறது. அந்த பாசத்துடன்தான் தைப்பூசம் முடிந்து சீர் கொண்டு வந்ததோடு பல ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர்.