குரு வக்ரம்: எந்த ராசிக்கு நன்மை? பாதிப்பு யாருக்கு? - பரிகாரங்கள்
Recommended Video
சென்னை: குருபகவான் தற்போது வக்ரகதியில் இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நன்மை அடைந்த மேஷம், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் பொருளாதார கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
குரு வக்கிரமாக இருக்கும் போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள். இந்த குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ராசியினருக்கு வக்ர காலத்தில் நல்ல பலன்களை செய்வார் குரு பகவான்.
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். ஜெனன ஜாதகங்களை கணிக்கும் போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும்.
குரு பெயர்ச்சி
நவ கிரகங்களில் சில கிரகங்கள் பின்னோக்கி வக்ரகதியில் செல்லும், சில கிரகங்கள் தன் நிலையில் இருந்து வேகமாக முன்னோக்கி அதிசாரமாக செல்லும். குரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதற்கு ஒரு வருடம் ஆகும். இதுபோன்ற சமயங்களில், அது இருக்கின்ற ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். இந்த அதிசார, வக்ர பலன்கள் சனி, சுக்ரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்களுக்கே உண்டு.
தோஷங்களை நீக்கும் குரு
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
கிரகங்கள் வக்ரம்
நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி செல்வார்கள். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115 டிகிரிக்கு வருகின்ற போது குரு வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும்.
வக்ரம் பெற்ற குருவினால் பாதிப்பு
சூரியனுக்கு 9ல் குரு வருகின்ற போது குரு வக்ரம் அடைந்து சூரியனுக்கு 5ல் வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.
இப்போது மேஷ ராசியில் சூரியன் அமர்ந்துள்ளார். துலாம் ராசியில் குரு இருக்கிறார். சூரியனுக்கு 7வது இடத்தில் இருக்கிறார் குரு. சூரியன் மிதுனம் ராசிக்கு வரும் போது அதாவது ஆனி மாதம் குரு வக்ர நிவர்த்தி அடைவார். இந்த குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் ராசியினருக்கு வக்ர காலத்தில் நல்ல பலன்களை செய்வார் குரு பகவான்.
பணப்பிரச்சினை ஏற்படும்
ஜெனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் பல்வேறு எதிர்மறையானப் பலன்களை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டதிபதி வக்ரம் பெறுகிறதோ அவ்வீட்டின் காரக பலனும், எந்த கிரகம் வக்ரம் பெறுகிறாதோ அக்கிரகத்தின் காரக பலனும் பாதிக்கப்படுகிறது. குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.
பிரச்சினைகள் எற்படும்
குருபகவான் துலாம் ராசியில் இருந்தாலும் இப்போது வக்ரநிலையில் இருக்கிறார். வேலைச்சுமையால் படபடப்பு அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டி வரும். தந்தைவழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மிதுனம் ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள், ஈகோ பிரச்சினைகள் வந்து போகும்.
கன்னி, விருச்சிகம், கும்பம்
கன்னி ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்லவும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மறதியால் விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். விருச்சிக ராசிக்காரர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கும்பம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.
பரிகாரம் என்ன?
ஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப் பட்டால், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள், ரத்தம் அசுத்தம் அடைதல், பதற்றம், படபடப்பு ஏற்படும். குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றவும்.