கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய நல்ல நேரம் : சந்தான கோபால கிருஷ்ண யாகம்
கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சின்னக் கண்ணனுக்கு பிடித்தமான பலகாரங்களை படையல் இட்டு வழிபட நல்ல நேரத்தை பார்க்கலாம்.
சென்னை: மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். சின்னக்கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஜென்மாஷ்டமி நாளில் தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால கிருஷ்ண யாகத்துடன் ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 5246வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகின்றோம். கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை "கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
அஷ்டமி திதி
அஷ்டமி திதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை காலை 8.08க்கு தொடங்குகிறது. மறுநாள் ஆகஸ்ட் 24 காலை 08.31க்கு முடிகிறது. வெள்ளிக்கிழமை பூஜை செய்ய நல்ல நேரம் காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை உள்ளது. மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரைக்கும் நல்ல நேரம் உள்ளது. காலையில் பூஜை செய்வதை விட மாலையில் பூஜை செய்வது சிறப்பானது.
கண்ணனை அழைப்போம்
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
குட்டிக்கண்ணன்
வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சந்தான கோபால கிருஷ்ண யாகத்துடன் ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இன்றைய நாளில் பகவான் கிருஷ்ணரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது.
யாகத்தினால் நன்மை
இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஜெயந்தி நாளில் கண்ணனை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க தன்வந்திரி குடும்பத்தினர் அழைகின்றனர்.