லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி - ஈபிஎஸ், ஓபிஎஸ் யோகங்கள் கை கொடுக்குமா
நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
சென்னை: லோக்சபா தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் அனல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் ஆளுங்கட்சி எதிர்கட்சியினர் இடையே போட்டி பலமாக உள்ளது. கூட்டணிகள், தேர்தல் அறிக்கைகள் என பங்குனி மாத வெயிலைக் காட்டிலும் அனல் பறக்கிறது அரசியல் களம். இந்த தேர்தலில் ஆளுங்கட்சி வெல்லுமா வாய்ப்பு எப்படி என்று முதல்வர், துணை முதல்வரின் ஜாதகங்களை வைத்து அலசலாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இரண்டாவது நிலையில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவிற்கு இக்கட்டான நிலை ஏற்படும் போதெல்லாம் முதல்வர் நாற்காலியில் அமராமலேயே முதல்வராக ஆட்சி செய்தவர் ஓ.பன்னீர் செல்வம். பணிவு செல்வமாக இருந்த அவர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் மூன்றவதாக பதவி ஏற்ற போது சசிகலா
ரூபாத்தில் வந்தது சோதனை.
சசிகலா முதல்வராவதை எதிர்த்து ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்திய போது கூவாத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்களால் திடீரென முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவுடன் அமைச்சரவை புகைப்படத்தில் கடைசியில் இருந்தவர் முதல்வர் நாற்காலியில் அமரும் அளவிற்கு யோகம் அடித்தது. சாமர்த்தியமாக சசிகலா, டிடிவி தினகரனை ஓரம் கட்டிவிட்டு தன்னை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை அவரது ஆதரவாளர்களோடு இணைத்துக்கொண்டு இரண்டு ஆண்டு காலமாக ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.
மிகத் துணிச்சலான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுக்கிறார்... பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம்
பழனிச்சாமி - பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் இணைந்த கைகளாக ஆட்சி நடத்தினாலும் இருவருக்கும் இடையே சிண்டு முடியும் வேலையை எதிர்கட்சியினர் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அசராமல் லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டனர். ஓ. பன்னீர் செல்வத்திற்கு பணிவான முதல்வர் என்ற பெயர் இருக்கும் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவினர் மத்தியில் குறிப்பாக பெண் வாக்காளர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து விட்டார்.
யோக ஜாதகம்
எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 2ஆம் தேதி 1954ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் லக்கினம் மகரம், துலாம் ராசியில் உச்சம் பெற்ற சனி, கும்பத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ரிஷபத்தில் குரு மிதுனத்தில் கேது, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் தனுசு ராசியில் ராகு கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அவரது ஜாதகத்தில் சச மஹா யோகம் அமைந்துள்ளது. சனி தனது சுய ராசிகளான மகரம், கும்பம் அல்லது உச்ச ராசியாகிய துலாமில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது சச மஹா யோகம் எனப்படும்.
வலிமையான தலைவர்
சச யோகத்தில் பிறந்தவர் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, ஏராளமான செல்வம் ஆகியவற்றை உடையவர். எல்லோராலும் புகழப்படுபவர், நல்ல வேலையாட்கள் அமைவர். வலிமையானவர், ஒரு கிராமம் அல்லது நிலப்பகுதிக்குத் தலைவராக விளங்குவார். மகிழ்ச்சி உடையவர் என ஜோதிடம் சொல்கிறது.
சனி தசையில் சுக்கிர புத்தி
உத்திராடம் சூரியன் நட்சத்திரம். எடப்பாடி பழனிச்சாமி பிறக்கும் போது சூரியபுத்தி 2 ஆண்டுகள் இருந்துள்ளது. 1956 வரை சூரியபுத்தி. 1956 ஜூலை முதல் 1966 ஜூலை வரை சந்திர புத்தி நடைபெற்றது. 1966 ஜூலை முதல் 1973 ஜூலை வரை செவ்வாய் புத்தி நடைபெற்றது. 1973 ஆம் ஆண்டில் இருந்து ராகு திசை தொடங்கியது. 1991ஆம் ஆண்டு வரை ராகு திசை நடைபெற்றது. 1991 ஜூலையில் வியாழ திசை தொடங்கியது 2007ஆம் ஆண்டு வரை வியாழதிசை நடைபெற்றது. 2007ஆம் ஆண்டு சனி திசை தொடங்கியது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி சனி திசை சுக்கிர புத்தியில் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. எதிரிகள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் வெற்றி அவர் பக்கம்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனிபகவான் அருள்
எடப்பாடி பழனிச்சாமிக்கு சனிபகவான் அருள் நிறையவே இருக்கிறது. உச்சத்தில் உள்ள சனிபகவான் ஆட்சிநாதன், லக்னகாரகனாகவும் இருக்கிறார். இப்போது சனி திசையும் நடைபெறுவதால் அரசாளும் யோகம் அடித்துள்ளது. இது லோக்சபா தேர்தலில் தொடரும் என்றும் 18 சட்டசபைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பார் என்பார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சிம்ம லக்னம் மீன ராசி
ஓ.பன்னீர் செல்வம் சிம்ம லக்னத்தில் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதாக ஜாதகம் கணிக்கப்பட்டுள்ளது. லக்னத்தில் கேது கன்னி ராசியில் சனி வக்ரம். தனுசு ராசியில் புதன் மகரத்தில் சூரியன், சுக்கிரன் கும்பத்தில் செவ்வாய் குரு ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இவரது ஜாதகத்தில் அரசாங்க கிரகமான சூரியன், அதிகாரத்துக்குரிய கிரகம் செவ்வாய், ராஜதந்திர கிரகமான சனி வலுவாக இருக்கின்றன. மேலும், குரு ராகு சாரத்திலும் ராகு குருவின் சாரத்திலும் இருப்பது நல்ல அம்சம்.
சனியின் சஞ்சாரம் சாதகம்
ஜாதகப்படி சிம்ம லக்னத்தில் பிறந்த அவருக்கு லக்னாதிபதி சூரியன் மறைந்திருக்கிறார். எனவேதான் அவரால் பதவியை பெற்றும் அதை தக்க வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சனியின் சஞ்சாரம், குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் சாதகமாகவே இருக்கிறது. ராகு திசை சுக்கிரபுத்தியும் நடப்பது நன்மை தரும் அமைப்புதான் என்கின்றனர் ஜோதிடர்கள். ராஜயோக அமைப்பு கொண்டது ஓபிஎஸ் ஜாதகம் என்று கூறும் ஜோதிடர்கள், கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தினால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்று கணித்துள்ளனர்.
மக்களின் கைகளில் வெற்றி வாய்ப்பு
நாளும் நமதே நாற்பதும் நமதே என்று ஜெயலலிதா பாணியில் முழங்கினாலும் கூட்டணி கட்சியினரின் ஜாதகத்தை வைத்தே வெற்றி வாய்ப்பு தேடி வரும். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து களம் கண்டது. நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் லேடி அலை வீசியதில் வெற்றி வாய்ப்பு அதிமுகவிற்கு தேடி வந்தது. இந்த முறை பல கட்சிகள் களம் காண்கின்றன. மே மாதத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு யோக ஜாதகங்கள் கை கொடுக்குமா பார்க்கலாம்.