மகாளய பட்சம் 2021: பித்ரு பட்சம்... முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற 15 நாட்கள்
மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 14 நாட்கள் கடைபிடிக்கும் விரதமாகும். புரட்டாசி மாதம் பவுர்ணமி முடிந்து பிரதமைத் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை மகாளய பட்ச காலமாகும்.
சென்னை: புரட்டாசி மாதம் பவுர்ணமி முடிந்து பிரதமைத் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 14 நாட்கள் கடைபிடிக்கும் விரதமாகும்
இந்த 15 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.
புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடுதானே. எனவேதான் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வந்து நம்முடன் தங்கியிருப்பார்கள் என்பது நம்பிக்கை.
நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களாக வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.
மகாளய பட்சமான பிரதமைத் தொடங்கி 15 நாட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை தினத்தில் ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி,மத்யாஷ்டமி, வியாதிபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விஷேசமாகத் தர்ப்பணம் செய்யலாம்.
இந்த நாட்களில் தர்ப்பணம் தர முடியாதவர்கள் மகாளய பட்ச காலத்தில் ஏதாவதொரு நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்திற்கான நமது முன்னோர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்காக நாம் திதி தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கி நமது தலைமுறையும் செழிக்கும் என்பது நம்பிக்கை. மகாளய பட்ச காலமான 14 நாட்களும் எந்தெந்த நாட்களில் யாருக்கு தர்ப்பணம் தரவேண்டும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி 08, செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை மகாபரணி, புரட்டாசி 12, செப்டம்பர் 28,செவ்வாய்க்கிழமை மகாவியாதிபாதம், புரட்டாசி 13,செப்டம்பர் 29 புதன் மத்யாஷ்டமி,புரட்டாசி 14,வியாழக்கிழமை அவிதவா நவமி இந்த நாட்களில் மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர பொதுவான நாளாகும்.
புரட்டாசி 17ஆம் தேதி அக்டோபர் 03,ஞாயிறுக்கிழமை, சந்நியஸ்தமாளயம் சந்நியாசிகளுக்கு திதி கொடுக்க ஏற்ற நாளாகும். புரட்டாசி 18, அக்டோபர் 4ஆம் தேதி திங்கட்கிழமை கஜச்சக்ஷமயாளயம், விதவைகள் அனுஷ்டிப்பதற்கு ஏற்றநாள்.
புரட்டாசி 19 அக்டோபர் 05, செவ்வாய்க்கிழமை சஸ்த்ரஹத மாளயம் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் தரலாம். புரட்டாசி 20, அக்டோபர் 06,புதன்கிழமை மகாளய அமாவாசை. மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தரலாம்.
மகாளய பட்சம் : வீடு தேடி வரும் முன்னோர்கள் - திதி கொடுத்தால் என்னென்ன நன்மைகள்
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய பட்ச காலம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.
மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் அன்னதானம் தர வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும். இது எதுவும் முடியாதவர்கள் நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.
சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷம் நீங்க மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து நம்முடைய வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.