சபரிமலையில் நாளை மண்டலபூஜை குவியும் பக்தர்கள் - தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்
சபரிமலை : ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜை காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தினசரியும் பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
பரவும் ஓமிக்ரான்... 5 மாநில சட்டசபைத் தேர்தல் தள்ளிப்போகிறதா? - தேர்தல் ஆணையர் சொல்வதென்ன?
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தினசரியும் 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மண்டலபூஜைக்கு முன்னோடியாக தேவசம்போர்டு சார்பில் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.

ஐயப்பனுக்கு தங்க அங்கி
சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை ஞாயிறன்று நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22ஆம்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.
தங்க அங்கி இன்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடையும்.

சபரிமலைக்கு வரும் தங்க அங்கி
அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனை
தொடர்ந்து 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

சபரிமலையில் மண்டலபூஜை
தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

மகரஜோதி தரிசனம்
மண்டல பூஜை முடிந்த உடன் ஹரிவராசனம் பாடி நாளை இரவு கோவில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30ஆம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.