புத்தாண்டு ராசி பலன் 2023..தொட்டது பொன்னாகும்..கோடீஸ்வர யோகம் இந்த ராசிக்காரருக்கு தேடி வரும்
சென்னை: புது வருடத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி சுபிட்சங்கள் கிடைக்கப்போகிறது. சனிபகவானும், குரு பகவானும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் சிலருக்கு தரப்போகிறார்கள். மிக முக்கியமான இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் யாரெல்லாம் சந்தோஷ மழையில் நனையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கடகம், சிம்மம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு மகத்துவம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குருவின் பயணம் பார்வை சாதகமாக உள்ளது. பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். முதல் 4 மாதங்கள் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்கிறார். வெளிநாடுகளில் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏற்றம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குரு பலன் வந்து விட்டது. முதல் 4 மாதங்களுக்குள் திருமணம் கைகூடி வரும்.

திருமணம் குழந்தை பாக்கியம்
திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண யோகம் வந்து விட்டது. தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கக் கூடிய யோகம் வந்து விட்டது. கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்யவும், வீடு வாங்கவும் கடன் உதவி கிடைக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு லோன் கிடைக்கும்.

முதலீடுகளால் லாபம்
குரு பகவான் கொடுக்கும் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்வது நல்லது. ஜனவரி மாதம் நிகழ உள்ள சனிப்பெயர்ச்சி சாதகமாக இல்லை. அஷ்டமத்து சனி காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனமும் விழிப்புணர்வும் அவசியம். அதே போல உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.

வேலையில் கவனம்
எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக்கூடாது. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. குடும்ப விசயத்தில் அடுத்தவரை தலையிட விடக்கூடாது. எதிர்பேச்சு பேசுவதை விட்டு விட்டு அட்ஜஸ்ட் செய்து செல்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளினால் தொந்தரவுகள் வரும். சனிக்கிழமை விரதம் இருந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குவதன் மூலம் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 2023ஆம் ஆண்டு யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவானின் பார்வையும், சனி பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் நடைபெறப்போகிறது. நிறைய பண வரவு வரப்போகிறது. செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நல்ல பதவிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களின் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும்.

நிறைய பண வருமானம்
பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வருட ஆரம்பத்தில் உங்களுக்கு நிறைய செலவுகள் வந்து போகும் காரணம் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானத்தின் மீது விழுவதால் நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு செல்லும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் பண வருமானம் வந்து கொண்டேயிருக்கும். அரசு தேர்வுகளை எழுதிவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தொட்டது பொன்னாகும்
2023ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கப்போகிறது. குரு பலன் வந்து விட்டதால் திருமண யோகமும் கை கூடி வரப்போகிறது. தன காரகன் பார்வை பலத்தால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அப்பா வழி உறவுகளால் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க வாய்ப்பு தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. சனிபகவான் ஏழாம் வீட்டிற்கு சென்று உங்கள் ராசியை பார்வையிடுவதால் தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இந்த ஆண்டு உங்களுக்கு கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். சுபிட்சங்கள் நிறைந்த மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications