சனி பெயர்ச்சி பலன் 2023: விடாது கருப்பாக விரட்டும் சனிபகவான்.. பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன?
சென்னை: சனிபெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்கள் சனியால் சங்கடத்திற்கு ஆளாகப்போகிறார்கள். யாரெல்லாம் இன்னும் இரண்டரை ஆண்டுகாலத்திற்கு கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் சிலருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இது பொதுவான பலன்தான் உங்களின் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது. சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க எளிமையான பரிகாரமும் உள்ளது.

ராஜயோகம் யாருக்கு?
கும்ப ராசிக்கு செல்லப்போகும் சனிபகவானால் அதிக ராஜயோகத்தை அடையப்போவது மேஷ ராசிக்காரர்கள்தான்.
மேஷ ராசிக்கு 11ஆம் வீட்டிற்கு வருவதால் யோகம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பாகும். துணிந்து நற்காரியங்களில் இறங்கலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் ராசிக்கு சனி வருவது யோகமான இடம். புதிய வேலைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள் செய்வீர்கள் பல மடங்கு லாபம் கிடைக்கும்.

துன்பங்கள் நீங்கும் காலம்
மிதுனம் ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடுமையான பொருள் இழப்பு, மன அழுத்தம், வேலை இழப்பு என பலவித இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். இனி துன்பங்கள் விலகி இன்பங்கள் அதிகரிக்கப்போகிறது. சனி பெயர்ச்சியால் தொல்லைகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள் நிம்மதி கிடைக்கப்போகிறது. சனிபகவான் 3,6,11ஆம் பாவகங்களில் வரும் போது நல்ல பலன்களைத் தருவார்.

அஷ்டம சனி, கண்டச்சனி
கடக ராசிக்காரர்களுக்க அஷ்டம சனி ஆரம்பிக்கிறது. எந்த விசயத்திலும் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். பண இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம். வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஏழாம் வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். எனவே கவனமாக இருப்பது அவசியம்.

கன்னி ராசிக்காரர்கள் குதூகலம்
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போகும் சனிபகவானல் கடன், நோய் எதிரிகள் பிரச்சினை நீங்கும்.
நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன்கள் வசூலாகும். வரவே வராது என்று நினைத்த பணம் கூட வீடு தேடி வரும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி விலகுவது யோகம்தான். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் என்றாலும் கஷ்டங்கள் இன்றி கடந்து விடுவீர்கள். அதிக பண வரவும் திடீர் செலவுகளும் வரும் அனுபவியுங்கள்

விடுதலை பெறப்போகும் ராசிக்காரர்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து மூன்றாம் வீட்டிற்கு செல்லப்போவதால் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எத்தனையோ இழப்புகள் அவமானங்களை சந்தித்த தனுசு ராசிக்காரர்கள் இனி மன நிம்மதி அடையப்போகிறீர்கள். மகர ராசிக்காரர்கள் ஜென்ம சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடப்போகிறீர்கள். தொல்லைகள் ஒழியப்போகிறது. இனி நிம்மதியாக உறங்கலாம்.

கவனமாக இருக்க வேண்டியவர்கள்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்ப மாகிறது. இருக்கிற வேலையில் கவனம் தேவை. இருக்கிற வேலையை விட்டு விட்டு புதிய வேலையை தேடி ஓட வேண்டாம். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் புத்திரபாக்கியம் கிடைக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. முதல் சுற்றில் இருப்பவர்களுக்கு சில படிப்பினைகள், சின்னச் சின்ன தண்டனைகளைத் தருவார். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். திடீர் விரைய செலவுகளும் வரும்.

நல்லெண்ணெய் தீபம்
சனி பகவானுக்கு உகந்தது எள். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படப்போகும் ராசிக்காரர்கள் சனிதிசை, சனி புக்தி நடப்பவர்கள் சனிக்கிழமையன்று சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கலாம். பாதிப்புகள் குறைந்து நல்லதே நடக்கும்.












Click it and Unblock the Notifications