குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்குமா? - சுக்கிரதிசை காலத்தில் யாருக்கு செல்வம் அதிகரிக்கும்
ஒருவருக்கு சிறு வயதில் சுக்கிரதிசை நடந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும் என்று பழமொழி சொல்லி வைத்திருக்கின்றனர்.
சென்னை: சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும். குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றால் குழந்தைப் பருவத்தில் வரும் சுக்கிர திசை ஆகாது.பயன் தராது என்று பெரும்பாலான சோதிடர்கள் சொல்கிறார்கள். சுக்கிரன் அள்ளிக்கொடுப்பது யாருக்கு, அலைச்சலை தருவது யாருக்கு என்று பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுளை நூற்றியிருபது வருடங்களாகப் பிரித்துள்ளனர். கேது தசை முதல் புதன் தசை வரை ஒன்பது தசாபுத்திகளாக பிரித்துள்ள பராசர மகரிஷி சுக்கிரனுக்கு மட்டும் இருபது வருடங்களை ஒதுக்கியிருக்கிறார். ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிரதசை வருமானால் அது இருபது வருடங்களுக்கு அவனை ஆளுமை செய்யும்.
ஒன்பது கிரக தசைகளிலும் அதிகமான வருடங்களைக் கொண்டது சுக்கிரன் மட்டும்தான். பரணி-பூரம்-பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம திசையே சுக்கிர திசையாக வரும். அசுவினி-மகம்-மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும் இதனால் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த குடும்பத்துக்கு பாதிப்பு வரும் என்பது பலரது கருத்து. சனியின் புத்திரனான குளிகன் களத்திர காரகனான சுக்கிரனுடன் ஆண் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் அவருக்கு அமையும் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை வர அதிக வாய்ப்பு உள்ளது என்பதையே 'குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்' என்ற ஜோதிட பழமொழி சொல்கிறது என்று ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு
ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத்துணை, அருமையான வீடு, உயர்தரமான வாகனம், உல்லாச வாழ்க்கை, எங்கும் எதிலும் சொகுசாக இருத்தல், மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றைத் தருபவர் சுக்கிரன் என்பதால் சுக்கிர திசை வரப்போகிறது என்றவுடன் பலரும் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

திருமண வாழ்க்கை
அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இள வயதிலேயே சுக்கிர திசை வரும். இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி மனதில் காதல் மணியடிக்க வைப்பார். இளம் வயது திருமணத்தையும் நடத்தி வைப்பார் சுக்கிரன்.

சுக்கிரனால் நன்மைகள்
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் பண வரவுகளுக்கும் பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.

சினிமா துறையில் வெற்றி
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் நுழையக்கூடிய நேரம் வரும். பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து மற்றும் பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் நடனம், நடிப்பிலும், சினிமா எடுப்பதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கும்.

சுக்கிரன் தரும் யோகங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்றாலும் கூடவே புதன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி பலன் கிடைக்கும். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது. அது போல சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். சுக்கிர திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்களும் அதிர்ஷ்டங்களும் உண்டாகும்.

சுக்கிர
ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூலமற்ற நிலை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும்.

உடல் நல பாதிப்பு
மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.

மகாலட்சுமி விரதம்
சுக்கிர திசை சுக்கிர புத்தி நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கஷ்டம் துக்கம், பிரிவு, சண்டை சச்சரவும் நாடோடியாக திரியும் அவலம் உண்டாகும். சுக்கிர திசை நடக்கும் காலத்தில் வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம். ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும் தாயாரையும் வணங்க சுக்கிரதிசை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications