திருப்பதி பிரம்மோற்சவம் 2020: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு - வரலாற்றில் இடம்பெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் தொட்டி தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்தனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரலாற்றில் இடம்பெற்றது. குறைவான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்தனர். ரத உற்சவம், தங்க தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஏழு கொண்டல வாடா கோவிந்தா... கோவிந்தா... ஸ்ரீனிவாச கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா என்ற முழக்கம் எதிரொலிக்க திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். லட்சக்கணக்காக பக்தர்கள் திருப்பதி, திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஒரு பக்தர் கூட மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லை காரணம் கொரோனா பற்றிய அச்சத்தினால் வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை காண்பது பெரும் புண்ணியம் என்று நினைக்கும் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 19ஆம் தேதி தொடங்கியது. தினசரியும் காலை, மாலை நேரங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கருடவாகன சேவையும் எளிமையாகவே நடைபெற்றது. தொடர்ந்து அனுமந்த வாகனம், குதிரை வாகனம் என வாகனங்களில் எழுந்தருளினார் மலையப்பசுவாமி. தங்கத்தேரோட்டம், ரத உற்சவம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான ஞாயிறன்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் தொட்டி தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்தனர்.
ஆண்டுதோறும் தீர்த்தவாரி ஸ்ரீவாரி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் கோவில் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறிய தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் ஆகியோரை கொண்டு வந்து, தொட்டிக்கு அருகில் எழுந்தருள செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது.மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
வெற்றி தரும் புரட்டாசி பௌர்ணமி விரதம் - லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும்
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவம் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்டது. பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படாத நிலையில், நாள்தோறும் 13ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதி மலையில் அனுமதி வழங்கப்பட்டது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவ விழாவிற்காக பல லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படும் இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் குறைவாக இருந்தது. லட்டு பிரசாத விற்பனையும் குறைவாகவே இருந்தது.
பிரம்மோற்சவ விழா நடைபெற்ற 10 நாட்களில் மொத்தமே 1 லட்சம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கை 10 கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை. ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் ஒரே நாளில் 3 கோடி ரூபாய் வரை வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.