கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா: திருச்சானூர் பத்மாவதி தாயாரின் தரிசனம் பாருங்கள்
திருப்பதியை அடுத்த திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கோலகலமாக நடைபெற்றது.
திருப்பதி: திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் பக்தர்களால் நேரடியாக கோவிலுக்கு சென்று பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முடியவில்லை. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினந்தோறும்அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார். நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் இங்கே எழுந்தருளும் பத்மாவதி தாயாரை வணங்குங்கள் பரிபூரண அருள் கிடைக்கும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார்
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார்.
ஆகாசராஜன் மகள்
பூலோகம் வந்த மகாலட்சுமி சந்திரவம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். பருவம் வந்த உடன் பெண் கேட்டு வந்தார் சீனிவாசன். பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன்.
ஸ்ரீனிவாசன் பத்மாவதி திருக்கல்யாணம்
திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறு வரம் பெற்றதாக வரலாறு. திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
அலர்மேல்மங்கை தாயார்
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார்.‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.
திருச்சானூர் பிரம்மோற்சவம்
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது இன்று வரை நடைபெறுகிறது.
தாயார் எழுந்தருளல்
கொடியேற்றம் முடிந்த உடன் அன்றைய தினம் இரவில் பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
12ஆம் தேதி காலையில் தாயார் பெரிய சேஷ வாகனத்திலும், அன்று இரவு அன்னப்பறவை வாகனத்திலும், 13ஆம் தேதி காலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவில் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினார்.
தாயாருக்கு கஜவாகனம்
திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த வாகனம் கருடவாகனம். அதேபோல தாயாருக்கு உகந்த பிரியமான வாகனம் கஜவாகனம்.பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தாயாருக்கு தீர்த்தவாரி
நிறைவு நாளன்று தாயாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவில் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக பக்தர்கள் விழாவில் பங்கேற்கவில்லை கோவில் ஊழியர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.