பிள்ளையாரை பிடிங்க... பொல்லாத தோஷமும் பறந்தோடி போகும்
விநாயகன் விக்னங்களை தீர்ப்பவன். பொல்லாத துன்பங்களையும் பொடிப்பொடியாக போக்குபவன் பிள்ளையார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள இந்தநாளில் தமிழ்நாட்டில் தோஷம் நீக்கும் பிரபல பிள்ளையார் கோவில்களை பார்க
மதுரை: பிள்ளையாரை பிடித்தால் போதும் பொல்லாத துன்பங்களும் பொடிப்பொடியாகும். விநாயகரை வணங்கினால் ராகு கேது தோஷம் நீங்கும், சர்ப்ப தோஷம் நீங்கி சங்கடங்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷமும் தீரும்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் என பல பிரபல ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை அவல் பொரி வைத்து வைத்து வணங்கினாலும் தீராத தோஷங்களை தீர்த்து நல்வழி காட்டுவார்.
முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்யலாம். அதே போல தோஷம் நீக்கும் விநாயகர் ஆலயங்களையும் தரிசிக்கலாம்.
திருவண்ணாமலை விநாயகர்
பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் இருக்கிறது அல்லல்போம் விநாயகர் ஆலயம். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம். இந்தத்தலம் பிள்ளையாரின் முதல் படைவீடாகும்.
விருத்தாச்சலம் ஆழத்துப் பிள்ளையார்
இது இரண்டாவது படைவீடு. தேவாரப்பாடல் பெற்ற- காசிக்குச் சமமானதாகக் கருதப்படுகிற விருத்தாசலத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கு எழுந்தருளியுள்ளார் ஆழத்துப் பிள்ளையார். பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நிதி கொண்டுள்ளார். படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை.
திருக்கடவூர் வாரணப் பிள்ளையார்
இது மூன்றாவது படைவீடாகும். சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலத்தில் உள்ளது வாரணப் பிள்ளையார் ஆலயம். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால் கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிக்கவல்லவர்.
மதுரை மீனாட்சி
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதான இந்த சித்தி விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை. இது நான்காவது படைவீடாகும். அப்பரும், சம்பந்தரும் பாடிய திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார் சித்தி விநாயகர். அம்மன் சந்நிதிக்குள் நுழையும்போதே சித்தி விநாயகரை தரிசிக்கலாம். மணிவாசகர் பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்கப் புறப்பட்டபோது இவரை வணங்கிய பின்பே சென்றதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
இது ஐந்தாவது படைவீடாகும். விநாயகப் பெருமானின் மிகப்பிரம்மாண்டமான ஆலயமாகக் கருதப்படுவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம். இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் துண்டிராச விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். எல்லா பேறுகளைப் பெற்றாலும் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது வீடுபேறு ஆகும். இதனை அருள்பவராக காசி துண்டிராச கணபதி திகழ்கிறார். அங்கு சென்று இந்த விநாயகரை வழிபட இயலாதவர்கள், சிவலிலிலிலிங்கத்தைக் கையில் வைத்து பூசை செய்கின்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே போதும்- காசிக்குச் சென்ற பலன் கிடைக்குமாம்.
திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார்
திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் ஆலயம் விநாயகரின் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. சிற்பியின் உளியால் பொள்ளப்படாமல் தோன்றியதால் இந்த விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். பொள்ளாப் பிள்ளையாரின் அருளால்தான் நம்பியாண்டார் நம்பிகள் தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார்.
சர்ப்ப தோஷம் போகும்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் உள்ள சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். பாபநாசம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலின் வடபுறம் உள்ள விநாயகரின் தலைக்குமேல் ஐந்து தலைநாகம் குடைபிடித்துள்ளது. மேலும் அவரின் இடுப்பு மற்றும் பத்து கரங்களிலும் பாம்புகள் காட்சியளிக்கின்றன. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.
மனக்குழப்பம் நீங்கும்
சென்னை- வேலூர் நெடுஞ்சாலையில் நவக்கிரககோட்டை எனும் புகழ்பெற்ற விநாயகர் தலம் உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகரின் 32 திருவுருவங்களை கொண்ட இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக ஸ்ரீநவசித்தி விநாயகர் விளங்குகிறார். மூலவருடன் இரண்டு விநாயகர்கள் சுயம்புவாக உள்ளனர். நடுவில் சிவலிங்க வடிவில் உள்ள மூர்த்தத்தின் நடுப்பாகத்தில் நாகம் படமெடுத்த நிலையிலும் திகழ்கிறது. சிந்தையில் தெளிவும், மனக்குழப்ப நிவர்த்தியும், ராகு கேது தோஷ நிவர்த்தியும் கிட்டும் தலமாக திகழ்கிறது.
சோம கணபதி
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம். சிவனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் இருக்கும் விநாயகரை சோமகணபதி என்று அழைக்கிறார்கள். அந்த கணபதியை தரிசித்த அடுத்த நொடியே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும் என்பது ஐதீகம். சோமகணபதியை காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள தேனம்பாக்கம் சிவாலயத்தில் தரிசிக்கலாம்.
வெந்நீர் அபிஷேகம்
பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் இணைந்த மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்தால் எத்தகைய தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை
பிரம்மஹத்தி தோஷம்
திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.
வள
மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தல விருட்சங்கள் உள்ளன. அவற்றை ஒரே நேரத்தில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும்.
உச்சிப்பிள்ளையார்
திருச்சியில் மலை உச்சியில் வாசம் செய்யும் பிள்ளையாரின் சக்தியை எளிதாக கணக்கிட்டு விட முடியாது. ஸ்ரீ ரங்கநாதரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் தங்க வைத்தவர் இந்த பிள்ளையார். விபீசணனுக்கு விளையாட்டு காட்ட மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து ஸ்ரீ ரங்கநாதரின் சிலையை பூமியில் வைக்க கோபம் கொண்ட விபீசணன் அடிக்க விரட்ட மலை மீது ஏறி தனது தரிசனத்தை காட்டி அருளினார் பிள்ளையார். அதுமுதல் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ ரங்கத்திலும் பிள்ளையார் மலை உச்சியிலும் அருள்பாலிக்கின்றனர்.