வினை தீர்க்கும் விநாயகர் : சங்கடம் தீர்க்கும் சதுர்த்தி விரதம் தரும் நன்மைகள்
எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். பிள்ளையார் சுழி போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை மூலகணபதி என்றும் நாம் வர்ணிக்க
சென்னை: நம் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். விரதத்தில் பல வகை உண்டு. அதில் விநாயகர் சதுர்த்தி அன்று துவங்குகிற சதுர்த்தி விரதம் முக்கியத்துவம் வாய்ந்தது.
முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.
ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வரவேண்டும். 11 சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்த பிறகு, அடுத்த ஆவணி யில், மீண்டும் விநாயக சதுர்த்தி அன்று விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். தடைபட்ட திருமணம், படிப்பு, வேலை, குழந்தைப் பேறு, வீடு கட்டுதல் என பல்வேறு காரணங்களுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம். வேண்டுதல் நிறைவேறும்.
கண நாதனை வணங்குவோம்
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம். நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.
உணவுப் பிரியர் விநாயகர்
அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.
கொழுக்கட்டை பிரியன்
மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம். அவல் குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.
எப்போதும் வருவார் விநாயகர்
பிடித்து வைத்தால் பிள்ளையார்... மஞ்சளோ, மாட்டுச்சாணமோ ஒரு இலையில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார்.
வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.