திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஏகாந்தமாக பஞ்சமி தீர்த்தம் - வியாழக்கிழமை புஷ்ப யாகம்
பத்மாவதி தாயார் கோவிலில் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு நாளான புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புரண கதை. பத்மாவதி தாயாரின் அவதார தினத்தை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கொரோனா பரவல் தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பத்மாவதி தாயார்
கடந்த 1ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 2ஆம் தேதி இரவு முத்துப்பந்தல் வாகனங்களில் பத்மாவதி தாயார் அலங்காரமாக எழுந்தருளினார். அன்றைய தினம் இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அலங்காரமாக அன்னை
கடந்த 3ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு ஹனுமந்த வாகனம் 4ஆம் தேதி காலை கோஜ பல்லக்கு உற்சவம், இரவு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். இரவு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. 5ஆம் தேதியன்று காலை சர்வபூபால வாகனசேவையும் மாலையில் தங்கத்தேருக்கு பதிலாக சர்வபூபால வாகன சேவையும், இரவில் கருட வாகன சேவையும் நடைபெற்றது.
அம்மன் அவதார நாள்
6ஆம் தேதி சூரிய பிரபை வாகன சேவையும் இரவு சந்திர பிரபை வாகன சேவையும் நடைபெற்றது. 7ஆம் தேதி தேருக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, 8ஆம் தேதி குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது. நிறைவு நாளான புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறிய புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.
அம்மனுக்கு யாகம்
நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது. முன்னதாக கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மங்கல சீர் வரிசை
பத்மாவதி தாயாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை பஞ்சமி நாளில் திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அன்பளிப்பாக அளிக்கப்படும்.