சபரிமலையில் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை.. தங்க திருவாபரணங்களில் ஜொலிக்கப்போகும் ஐயப்பன்
சபரிமலை: மகரவிளக்கு பூஜை வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைபந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது. திருவாதிரை ராகங்கள் மற்றும் குறத்தி பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமிகள் நடனம் ஆடினர். புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் சிறுமிகளின் நடனத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.
தரிசனத்திற்காக ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த 90 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
அதேசமயம் உடனடி ஆன்லைன் முன்பதிவு மூலம் வந்த பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்காக வரும் ஜனவரி 8ஆம் தேதி வரை 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதன் காரணமாக அன்றைய நாட்களில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு அடிப்படையில் மட்டுமே சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வந்துவிடுகின்றனர். அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடி முன் பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பின்வரும் காலங்களில் அனுமதி மறுக்கப்படும் எனவும், இது போன்ற செயல்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 12ஆம் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. சபரிமலையில் வருகிற 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக பம்பையை சென்றடையும். ஆபரண பெட்டிகள் வரும் வழியெங்கும் வானத்தில் கருடன் வட்டமிட்டு கூடவே காவலுக்கு வரும். அப்போது பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும். ஆபரண பெட்டிகள் 14ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு நடைபெறும் அலங்கார தீபாராதனைக்குப்பின் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
அதன்பிறகு 20ஆம் தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். ஐயப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம் தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது. 41 நாள் மண்டல பூஜை காலத்தில், 33 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சபரிமலையில் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இந்த காலத்தில் ரூ.222.98 கோடி வருமானம் கிடைக்கப் பெற்றதாக, சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வம்போர்டு தெரிவித்தது.