தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலம் - பழனி, திருச்செந்தூரில் தடையை மீறி குவிந்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தடையை மீறி பாதை யாத்திரையாக வந்த பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு கிரிவலப்பதையில் வலம் வருகின்றனர்.
பழனி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கிரிவலப்பாதையில் காவடியுடன் வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநியில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தினசரியும் பாதையாத்திரையாக பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருகின்றனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மலைக் கோயில் அடிவாரத்தில் தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நேற்றிரவு நடைபெற்றது.
தைப்பூச தினமான இன்று மாலை கோயில் ஊழியர்களை மட்டும் வைத்து முதன்முறையாக சிறிய மரத் தேரில் தேரோட்டம் நடைபெற உள்ளது
வழக்கமாக ஆண்டு தோறும் தைப்பூச நாளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.
தைப்பூச நாளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்தும், வேல்குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் பாதையாத்திரையாக வந்துள்ள பக்தர்கள் துண்டுக்கை விநாயகர் ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.