காதலர் தினம் 2023: உங்க காதல் ஜெயிக்குமா? கட்டம் சொல்வதென்ன? லவ் அஸ்ட்ராலஜி சொல்லும் ரகசியம்!
காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில் வெள்ளிக்கிழமையான இன்று காதல் நாயகன் சுக்கிரன் பற்றி தெரிந்து கொள்வோம்.
சென்னை: மனதில் உள்ள ஆசையை, காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது. இவரே காதல், காம நாயகன். எனவேதான் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது மணமகன், மணமகள் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் எப்படி பயணம் செய்கிறார் என்று பார்க்கின்றனர். ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணி, பார்வை ஆகியவற்றை பொருத்து காதல் திருமணம் நடைபெறுமா? காதல் ஜெயிக்குமா என்று பார்க்கலாம்.
திருமண வயதில் மகனையோ, மகளையே வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு 20 வயதை கடந்து விட்டாலே ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு வரன் தேட கிளம்பிவிடுவார்கள். சில குழந்தைகளோ பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தாங்களே தங்களுக்கு ஏற்ற ஜோடியே தேடி காதலித்து பெற்றோரிடம் கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்டது. ஜாதி, மதம் மாறி திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம்தொழில் மற்றும் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று வாழும் சூழ்நிலை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. காதல் கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து அவருக்கு காதல் மலருமா? வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுமா என்று பார்க்கலாம்.
உயிர்களில் காதல் உணர்வு, காம உணர்ச்சி , வாழ்க்கைத் துணை ,செல்வ நிலை, அந்தரங்க உறுப்புகள் ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாகிறார் சுக்கிரன். சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார், ரிஷபம் துலாமில் ஆட்சி பெறுகிறார், கன்னியில் நீசம் அடைகிறார்.
சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் ஒருவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை, வசீகரத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகமும் இது தான். அதிர்ஷ்டத்தை வழங்குவதும் சுக்கிரனின் பார்வையே. எனவேதான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து உனக்கு சுக்கிரதிசையா என்று கேட்கின்றனர்.
பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்து, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தார். மேலும் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்தார்.
மஹாபலி சக்கரவர்த்தி வாமனருக்கு தானம் கொடுக்க வந்த போது கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் சென்று அடைத்துக்கொண்டார். அந்த துவாரத்தில் உள்ள அடைப்பை நீக்கும் பொருட்டு தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் கண்களில் தரப்பை புல் குத்த சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார். கண்ணை இழந்து வாடும் சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காட்டில் தவம் இருந்து சிவன் அருளாள் கண் பார்வையை பெற்றார். காதலுக்குரிய கிரகமான சுக்கிரன் இவ்வாறு கண்களை இழந்ததால் தான காதலுக்கு கண் இல்லை என்று சொன்னார்கள்.
சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு அதிபதி ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர்.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகரின் பெயர் பெண்களால் கெடும். ஏகப்பட்ட சச்சரவுகளை வாழ்வில் சந்திக்க நேரும். சுக்கிர திசையில் இது பல மடங்காகும். காரணம் மேஷம், விருச்சிகம் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற வீடாகும். சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் சொந்த வீடு. ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிஷபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.
சுக்கிரன் மிதுனத்தில் இருந்தால்,அவர் நிர்வாக திறமை கொண்டவராகவும் நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.அரசு வேலை கிடைத்து நிறைய பொருள் சேர்க்க வாய்ப்புண்டு. கடகத்தில் இருந்தால், அவர்களுக்கு அகங்காரம் இருக்கும்.இதனால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சிலருக்கு இரு தாரங்கள் அமைந்து துன்பப்படும் சூழ்நிலையும் உண்டாகும்.
சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி புகழ்பெற்றவராக இருப்பார்.பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம். நீச வீடான கன்னியில் சுக்கிரன் அமைந்தால் ராசிக்காரர் ஏழ்மை நிலை ஏற்படும். அதே நேரத்தில் நீசபங்கமடைந்து விட்டால் அவருக்கு ராஜயோகம் கூடி வரும். சனியின் வீடான மகரம்,கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டாகும். இல்லற வாழ்வு இதமாக இருக்காது. தனது உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ராசிக்கார ஏதாவது ஒரு கலையில் வல்லவராக இருப்பார்.அதன் மூலம் புகழும்,செல்வாக்கும் பெறுவார்.
பொதுவாக சுக்கிரன் ஒருவருக்கு மிகவும் பலம் பெறுவது கூடாது. அமுதமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். ஒருவருக்கு உடம்பில் காமத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறான். மனதின் கோபத்தை செவ்வாய் ஆட்சி செய்கிறான். ஒருவர் ஜாதகத்தில் இருவரும் சேர்ந்து விட்டாலோ ஒருவரை ஒருவர் பார்த்து விட்டாலோ இருவரும் பரிவர்த்தனை ஆகி விட்டாலோ இருவரும் சனியுடனோ, ராகுவுடனோ சேர்ந்தாலும் அந்த ஜாதகரை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஜாதகர்கள் அதிக சுகத்திற்காக ஆசைப்படுபவர்கள் எனவேதான் அவர்களுக்கு ஏற்ற ஜோடியை இணைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.
செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.
அது போல நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டோ அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. இவை ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.
ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்களும் சுக்கிர வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள். கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் அருகில் உள்ள மாங்காடு ஆகிய ஆலயங்கள் சுக்கிர பரிகார தலங்கலாகும். வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.