உலக அகிம்சை தினம்
தனது 18ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு 'பாரிஸ்டர் (barrister)" எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோனது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிறவெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
தனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, 'தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை" எனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1906ம் ஆண்டு 'ஜோகார்னஸ்பேக்" நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும்.
இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற்கொண்ட உப்பு பேரணி காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட "உப்பு சட்டங்களையும்" பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் சீர்குலைக்கப்போவதாக காந்தி கூறியபோது, அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால், தான் தீர்மானித்தபடி, கடலுக்குள் 247 மைல்கள் தூரம் காந்தி பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு!" என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ம் வருடம் ஜனவரி 30ம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.