Fact check: திமுகவினருக்கு எதிராக செய்தி போடாவிட்டால் அடிப்போம் என்றாரா பாஜக நிர்வாகி? உண்மை என்ன?
சென்னை : திமுகவிற்கு எதிராக செய்தி போடவில்லை என்றால் கமலாலயம் வரும் பத்திரிகையாளர்களை அடிக்கத்தான் செய்வோம் என பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
நேற்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் பகுதியில், பாஜகவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பத்திரிகையாளரை பாஜகவினர் தாக்க முற்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தச் சம்பத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார். ஆனால், பாஜக நிர்வாகியான நிர்மல்குமார், அப்படித்தான் அடிப்போம் எனக் கூறியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவியது.

என்ன நடந்தது?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று தமிழகம் திரும்பினார். பின்னர் நேற்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அண்ணாமலையை வரவேற்க ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு குழுமியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் - பாஜகவினர் வாக்குவாதம்
இதனை அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் பத்திரிகையாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாஜகவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜகவினர் சிலர் பத்திரிகையாளர்களை கடுமையாக திட்டியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் கண்டனம்
பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை தாக்க முயன்ற பாஜகவினர் பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். மேலும், பாஜகவினர் பத்திரிகையாளர்களை அவமதிப்பதற்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனமும் தெரிவித்தது.

வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
இதனையடுத்து, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், பத்திரிகையாளரை தாக்க முயன்ற நிர்வாகிகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அண்ணாமலை அவர்களிடம் உறுதியளித்தார்.

தீயாகப் பரவிய தகவல்
இந்நிலையில், ஒரு செய்தி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. பாஜகவின் ஐடி விங் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், "திமுகவிற்கு எதிராக செய்தி போடவில்லை என்றால் கமலாலயம் வரும் பத்திரிகையாளர்களை அடிக்கத்தான் செய்வோம்" எனக் கூறியதாக ஒரு செய்தி பரவியது. இதுதொடர்பான நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

உண்மை என்ன?
இதுதொடர்பாக விசாரித்ததில், பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரோ, அல்லது கமலாலயம் முன்பு இருந்த பாஜக நிர்வாகிகள் வேறு எவருமோ, பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறவில்லை எனத் தெரிய வருகிறது. மேலும், சிடிஆர் நிர்மல் குமாரும், தனது ட்விட்டர் பக்கத்தில், இது பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவ்வாறு பரவுவது போலிச் செய்தி என்பது தெளிவாகிறது.

Fact Check
வெளியான செய்தி
திமுகவிற்கு எதிராக செய்தி போடவில்லை என்றால் கமலாலயம் வரும் பத்திரிகையாளர்களை அடிக்கத்தான் செய்வோம் என பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு தகவல் பரவியது.
முடிவு
சிடிஆர் நிர்மல் குமார் இவ்வாறு கூறியதாக வெளிவந்துள்ள செய்தி பொய்யானது. அங்கிருந்த பத்திரிகையாளர்களும், சிடிஆர் நிர்மல் குமாரும் இந்த தகவலை மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications