சோனியாவுக்கு யு.எஸ். மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க கோர்ட் உத்தரவு!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டத்தின் கீழ் சீக்கிய மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், சீக்கியர்களுக்கு எதிரான இத் தாக்குதலை முன்னின்று நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத், சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார். கலவரத்தால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம்,பொருள் சேதம் போன்றவற்றுக்கு சோனியா காந்தி இழப்பீடு தர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சோனியா காந்திக்கு கடந்த 3-ந் தேதி சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்தான் நியூயார்க்கில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி சென்றார். இதனால் சீக்கிய மனித உரிமை அமைப்பினர் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியிடம் சோனியாவுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதை பரிசீலித்த நீதிபதி, மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனைநிர்வாகிகள், ஊழியர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலம் சோனியாவுக்கு சம்மனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டார்.