ஐஏஎஸ் கனவு.. விடாத நம்பிக்கை.. ஆக்ஸிஜன் சிலிண்டருடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதிய கேரள பெண்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுத மாணவி ஒருவர் வந்தது அவரது ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் கண்டு அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லதீஷா (24). இவர் பிறக்கும் போதே எலும்பு நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு நுரையீரல் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதால் அவரால் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.
தயார்
இதனால் அவரை அவரது பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் வளர்த்து வந்தனர். லதீஷாவுக்கு சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவு இருந்தது. இதற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தார்.
திருவனந்தபுரம்
இந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்டது. இதில் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் லதீஷா எழுதினார்.
மலையாளம்
எம். காம் வணிகவியல் படித்துள்ள அவர் சக்கர நாற்காலியின் பின்புறத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுதினார். இதுதான் அவர் எழுதும் முதல் யூபிஎஸ்சி தேர்வாகும். இவர் தனது விருப்ப மொழியான மலையாளத்தில் தேர்வு எழுதினார்.
இலவசம்
தேர்வு அறையில் தனக்கு தேவையான உதவிகளை செய்த கோட்டயம் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். அனைத்து உபகரணங்களையும் ஆட்சியர் இலவசமாகவே செய்து கொடுத்துள்ளார். முயற்சியும் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்ட லதீஷா தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆக வேண்டும் என பிரார்த்திப்போம்.