ஒரு பிஞ்சின் சோகம்...
பெங்களூர்:
குஷால் குமார் 12 வயது சிறுவன். தன் வயதினை ஒத்த சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பேட்டுடன் கையுமாக ஓடித் திரியும் வயது தான்.
ஆனால், இவனால் அது முடியாது. இரு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டவன். அதைத் தொடர்ந்து ஏற்பட்டஹார்மோன் பாதிப்பால் பல உடல் உபாதைகளை சந்தித்து வருகிறான்.
ஆனால், இதையெல்லாம் அவனை கட்டிப் போட்டுவிடவில்லை. பாதிநேரம் படுத்தபடுக்கையாய் இருந்தாலும் கையில் ஸ்கெட் பேனா எடுத்துவிட்டால்,நோயை வெல்ல கிளம்பி விடுகிறான்.
ஒரு மாதத்துக்கு மாத்திரைகளுக்கு மட்டும் ரூ. 15,000 தேவை என்ற நிலையில் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. ஒரு கீழ் நடுத்தரக்குடும்பத்துக்கு இது பெரும் சுமை தான்.
இதனால், தனது குடும்பத்துக்கு இனியும் சுமையாய் இருக்க விரும்பாத இவன், தான் வரைந்த ஓவியங்களை விற்றே தன் மருத்துவச் செலவுகளைச்சந்திக்கத் திட்டமிட்டுள்ளான்.
வீட்டிற்குள் இருந்தபடியே சுமார் 30 ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் பெங்களூர் பசவனகுடி புல்டெம்பிள் ரோட்டில், ராமகிருஷ்ணாஆசிரமம் அருகே உள்ள நிர்மல் ஆர்ட் காலரியில் கண்காட்சியாக வைக்கப்பட இருக்கின்றன.
இந்த கண்காட்சி 25.02 2001 முதல் 05.03.2001 வரை நடை பெறவிருக்கிறது. நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
குஷாலின் இந்த ஓவிய கண்காட்சி குஷாலின் திறமையை வெளிப்படுத்துவதாக மட்டும் அமைவதில்லை. அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்வாழ்நாள் முழுவதும் அவர் தொடரப்பட வேண்டிய சிகிச்சைக்கு உதவும் விதமாகவும் நடத்தப்படுகிறது.
பொதுவாக சிறுவர்களுக்கு பிடித்த மலைகள், கட்டிடங்கள், டினோசர் போன்றவையே குஷாலின் ஓவியத்தில் காணப்படுகின்றன.
இந்த ஓவியக் கண்காட்சிக்கு விஜயம் செய்வது குஷாலின் முயற்சியை ஊக்குவிப்பது மட்டுமல்ல தன்னை சுற்றியுள்ளவர்களும் இந்த சமூகமும்தன்னை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையை அவனுக்கு அளிக்கும்.