ஜனாதிபதியாகிறார் அப்துல்கலாம்?
டெல்லி:
பிரபல விஞ்ஞானியும் தமிழருமான ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அடுதத ஜனாதிபதியாகலாம் என்று தெரிகிறது.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் அலெக்சாண்டரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்துள்ளதால், அப்துல் கலாமை நிறுத்த பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று பிரதமரின் இல்லத்தில் நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
அலெக்சாண்டரின் பெயரை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி பார்த்துவிட்டு, முடியாத பட்சத்தில் அப்துல் கலாமின்பெயரை முன்மொழிய பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என்பது உறுதி.
இன்று பிரதமரின் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு,சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இக் கூட்டத்தில் அப்துல்கலாமின் பெயர் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
ராமநாதபுரத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்திய ஏவுகணைகளின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படுபவர்.1931ம் ஆண்டு பிறந்த இவர் அக்னி, பிருத்வி, திரிசூல், நாக் ஏவுகணைகளைத் தயாரித்தவர். இந்திய விண்வெளிஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
இந்தியாவின் அணுகுண்டு சோதனையிலும், அர்ஜூன் டாங்கிகள் தயாரிப்பிலும், எல்.சி.ஏ. போர் விமானத்தயாரிப்பிலும் பெரும் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இஸ்ரோவின் சார்பில் அமெரிக்காவில் நாஸாவில்ராக்கெட் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்.
இன்று ஹைதராபாத்தில் தன்னைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரமோத் மாஜனிடம் அலெக்சாண்டரை ஏற்கசந்திரபாபு நாயுடு மறுத்தவிட்டார். இதையடுத்து கலாமின் பெயரை மகாஜன் முன்மொழிந்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நாயுடு டெல்லி வந்து பிரதமரை சந்திக்க ஒப்புக் கொண்டார். சொன்ன மாதிரியே மாலைடெல்லி வந்து பிரதமரைச் சந்தித்து அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவது குறித்துப் பேசினார்.
இதையடுத்து மகாஜன் மும்பை சென்று கலாமுக்கு பால்தாக்கரேயின் ஆதரவையும் பெற்றார். கலாமுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்தார்.
கலாமுக்கு திரிணமூல் காங்கிரஸ், ராம்விலாஸ் பாஸ்வான், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் ஆதரவுதெரிவித்துள்ளன.
கலாமை நிறுத்தினால் ஒருமித்த கருத்து ஏற்படும் என்பதால் அவரை நிறுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
இது குறித்து இன்று இரவு பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். முன்னதாகஅத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுடன் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவது குறித்து பிரதமர்விவாதித்தார்.
அப்துல் கலாமை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரதமர் தொலைபேசியில்பேசினார். ஆனால், தனது முடிவை அறிவிக்க சோனியா சிறிது கால அவகாசம் கேட்டுள்ளார் என்று தெரிகிறது.தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வது நாளை தொடங்குகிறது.
இன்று இரவுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும். காங்கிரசின் முடிவும்இரவு தெரியவந்துவிடும்.
அனைவரும் ஏற்கும் பட்சத்தில் அப்துல்கலாம் ஜனாதிபதியாவார்.