ஜெவின் பாதுகாப்பில் மாற்றம்: புல்லட் புரூ ஃப் கார்- உடை பயன்படுத்த முடிவு
சென்னை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாயுடுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்த காரணத்தால்தான் கண்ணி வெடித் தாக்குதல்நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் ஆந்திர நக்சல்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் ஆதரவும், ஆட்களும் உள்ளதால்ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. குறிப்பாக வீரப்பனின் காட்டுப் பகுதியில் தமிழ்த் தீவிரவாதஇயக்கங்களுககும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆந்திராவில் மிக பலத்த பாதுகாப்பில் இருக்கும் நாயுடுவையே தாஙகள் நினைத்த நேரத்தில், நினைத்தபோதுதாக்க முடியும் என்பதை நக்சலைட்டுகள் காட்டிவிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நக்சல்கள் மற்றும்அவர்களது கூட்டாளிகளால் நிச்சயம் ஆபத்து வரலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.
தற்போது ஜெயலலிதாவுக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் முதல் ரிங் பாதுகாப்பு வழங்குகின்றனர்.இது தவிர தமிழக போலீசாரின் கமாண்டோ படை இரண்டாவது ரிங் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
நாயுடு மீதான தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பில்சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தியுள்ளது.
இனிமேல் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத உடைகளை அணியுமாறு ஜெயலலிதாஅறிவுறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, குண்டு துளைக்காத காரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா இனிமேல் காரில் செல்லும்போது அந்த வழியில் செல்போன்கள், ரிமோட் கண்ட்ரோல்கருவிகள் போன்றவற்றை செயலிழக்கச் செய்யும் எலெக்ட்ரானிக் ஜாமர்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
இதுதவிர தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக பகுதியில் ஆட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை நகரில் சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் விழாக்களில் மட்டுமே இனிமேல்ஜெயலலிதா கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம், அண்ணா பல்கலைக்கழக அரங்கம்,தலைமைச் செயலக மாநாட்டு அரங்கம் ஆகிய பாதுகாப்பு மிக்க இடங்களில் நடக்கும் கூட்டங்கள், விழாக்களில்மட்டுமே ஜெயலலிதா கலந்து கொள்வது நல்லது என்று மத்திய உளவுப் பிரிவும், போலீசாரும் முதல்வரிடம்தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களுக்குச் செல்வதாக இருந்தால் விமானம் அல்லது ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா.அதையே தொடர்ந்து கடைபிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழக- ஆந்திர எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நக்சலைட்டுகள்தமிழகத்துக்கோ அல்லது கர்நாடகத்துக்கோ தப்பலாம் என்பதால் இரு மாநில எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுகண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனைகளும்தீவிரமாக நடந்து வருகின்றன.
இந் நிலையில் கண்ணிவெடிக் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மேலும் 8 வெடிக்காத கண்ணிவெடிகளும்கைப்பற்றப்பட்டுள்ளன.