என் மீது ஜெ. நடவடிக்கை எடுக்கலாம்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் நடக்கும் கொள்ளை, வழிப்பறி, குண்டுப் புரளிகளுக்கு நானும், திமுகவினரும் தான் காரணம் என்றுகூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அதற்கான ஆதாரம் இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
தமிழகத்தில் நடக்கும் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகளுக்கு திமுகவினரும், நானும்தான் காரணம் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். அப்படியானால் இதுதொடர்பான ஆதாரங்களை வைத்து அவர் கோர்ட்டில் வழக்குத் தொடரத் தயாரா?. அதை சந்திக்கநாங்கள் தயார்.
சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதால், தனது ஆட்சி கலைக்கப்படும் என்ற பயம் ஜெயலலிதாவுக்கு வந்துவிட்டது.இதனால் தான், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இப்படிப் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது ஆட்சிகலைக்கப்படக் கூடாது என்றே விரும்புகிறேன்.
சென்னை நகர பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்தது திமுகவினர்தான் என்று ஜெயலலிதா கூறுவது பச்சைப் பொய்.இதுபோன்ற அவதூறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் கழகத்திற்கு எதிராக மக்களை திசை திருப்ப ஜெயலலிதா நினைக்கிறார், ஆனால்அது ஒருபோதும் நடக்காது.
வாய்க்கு வந்தபடி எதிர்க் கட்சிகள் மீது சேற்றை வாரி வீசுவது, ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதெல்லாம்ஜெயலலிதாவுக்கு புதிதல்ல.
மோரில் விஷம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொல்ல முயன்றார் ஜானகி அம்மாள் என்று கூறியவர்தான் இந்த ஜெயலலிதா.
தமிழகத்தில் நடந்த கொள்ளைகளுக்கு, பிரதமராக இருந்த நரசிம்மராவையே ஒருமுறை குற்றம் சாட்டினார்ஜெயலலிதா. மூப்பனாருக்கும் ராஜிவ் கொலையாளிகளுக்கும் தொடர்பிருப்பதாக சொன்னவர் ஜெயலலிதா.
ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக சட்டமன்றத்திலேயேசொல்லியவர் இவர். தொல்காப்பியம் எழுத கோவாவுக்கு நான் சென்றபோது, வீரப்பனைப் பார்க்கப்போயிருப்பதாக புலம்பியது இதே ஜெயலலிதா தான்.
கடந்த 1979-80ம் ஆண்டுகளில் சட்டசபையில் விவாதமின்றி 50க்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகநிதியமைச்சர் பொன்னையன் கூறுகிறார். அவர் அப்படிக் கூறுவது சுத்தப் பொய்யாகும். அதற்கு இந்த புத்தகங்களே சான்றாகும் (சட்டசபைகுறிப்பேட்டுப் புத்தகங்களைக் காட்டுகிறார்). இந்தப் புத்தகங்கள், குறிப்பேடுகளைப் பார்த்தீர்களேயானால், விவாதம்நடந்த பின்னரே மசோதாக்கள் நிறைவேறியது தெரிய வரும்.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அன்றைய சட்டசபைத் தொடர் நிகழ்ச்சிகள் குறித்த ஆவணங்களாகும். பொய் சொல்லும் பொன்னையனைஅருகில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா எப்படி சரியாக செயல்படுவார்?. மசோதாக்கள் குறித்து இந்த அரசை நான் குற்றம்சாட்டியதில் தவறே இல்லை. இதை பொன்னையன் ஏற்காவிட்டால், இந்த புத்தகங்களை எரித்துவிட வேண்டியதுதான்.
சட்டசபையில் விவாதம் நடந்ததை மறைத்து, நடக்கவே இல்லை என்று சாதிக்கும் பொன்னையன், தான் சொன்னது பொய் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் அடுத்த முறை சட்டமன்றத்துக் போகும்போது அவருக்கு எதிராக நிச்சயம்உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வருவேன். அதுவரை சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்க வேண்டும்.
மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் கூட பாசனதுக்காக நீரை இந்த அரசு திறக்காமல் இருப்பதுவேண்டுமென்றே மேற்கொண்டுள்ள நடவடிக்கை தான். காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று தீர்மானமாகஇருக்கிறார் ஜெயலலிதா. தஞ்சை விவசாயிகளை பழிவாங்க வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்றார் கருணாநிதி.
ராமதாஸ் கோரிக்கை:
இதற்கிடையே கருணாநிதி மீது சட்டமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும்என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கம் அளிக்கக் கூட வாய்ப்பு கொடுக்காமல், பத்திரிக்கை செய்தியை மட்டும் ஆதாரமாக வைத்து கருணாநிதிமீது நிதியமைச்சர் பொன்னையன் உரிமைப் பிரச்சனை கொண்டு வந்துள்ளார். அந்தப் பத்திரிக்கையே செய்தியைதவறாக வெளியிட்டதாகச் சொல்லி திருத்தம் வெளியிட்டுள்ளது. இதனால் பிரச்சனையை இத்துடன் விட வேண்டும்என ராமதாஸ் கூறியுள்ளார்.