கருத்துக் கணிப்பு: திமுக கூட்டணியே வெல்லும்
சென்னை:
இப்போது தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என சென்னை லயோலா கல்லூரி நடத்தியகருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சங்கராச்சாரியார் கைது, வீரப்பன் வதம் ஆகிய நிகழ்வுகளையடுத்து அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பும் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
அந்தப் பத்திரிக்கை கருத்துக் கணிப்பு நடத்திய காலகட்டத்தை ஒட்டியே லயோலா கல்லூரியும் ஒரு கருத்துக் கணிப்பில் இறங்கியது.
இக் கல்லூரியின் காட்சி தகவல் இயல் துறையும், பண்பாடு மக்கள் தொடர்பகமும் இணைந்து தமிழகத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் 10-ம்தேதி வரையும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் 3,256 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தின.
ஜெயேந்திரர் கைதுக்கு 59% ஆதரவு:
அதன் முடிவுகள் வருமாறு:
ஜெயேந்திரர் கைது விஷயத்தில் அதிமுக அரசை 58.1 சதவீத மக்கள் ஆதரிக்கின்றனர்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு திமுகவே காரணம் என்று 37.9 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
சேதுசமுத்திர திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. உடனே இத் திட்டத்தைநிறைவேற்ற வேண்டும் என்று 62.5 சதவீதம் பேரும், கூடாது என்று 24.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரம் காவல் துறையின் அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டதாக 32.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா தலைமையிலான அரசை மத்திய அரசு கலைக்குமா என்ற கேள்விக்கு 86.6 சதவீதம் பேர், இல்லை என்றே பதில் தந்துள்ளனர்.
ஜெ சலுகைகள் தேர்தலுக்காகவே..
பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் ஜெயலலிதா அறிவிப்பது தேர்தலைக் குறிவைத்துத்தான் என்று 54.7 சதவீதம் மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இச் சலுகைகள் தேர்தல் வரை தொடர்ந்தாலும் தேர்தல் முடிவுகளில் பெரும் பாதிப்பு எதுவும் இருக்காது என்று 44.5சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
கொள்கையில் உறுதியான கட்சி என்ற வகையில் திமுகவுக்கு -36.3 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு -15.6 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பவர்களை பதவி நீக்கம் செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று 34.2 சதவீதம்பேரும், அவர்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று 22.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக 41%, அதிமுக 19 !!:
தமிழகத்தில் எதிர்க்கட்சி கூட்டணிகளில் முதன்மைக் கட்சி என்ற அளவில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் பொறுப்புள்ளதலைமையாக திமுக செயல்படுவதாக 38.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று 54.3 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு 41.7 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு 19 சதவீதத்தினரும்,காங்கிரசுக்கு 8.7 சதவீதத்தினரும், பாமகவுக்கு 2.9 சதவீதத்தினரும், மதிமுகவுக்கு 1.6 சதவீதத்தினரும், பாஜகவுக்கு 1.4 சதவீதம் பேரும்ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்:
இப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தால் எந்த கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடும் என்ற கேள்விக்கு திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக,கம்யூனிஸ்ட்கள் கூட்டணி என்று 62.1 பேரும், அதிமுக--பாஜக கூட்டணி வெல்லும் என்று 11.7 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சசிகலா, தினகரனுக்கு ஆதரவு!!:
திமுகவில் மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக 84.6 சதவீதம் பேரும், அதிமுகவில் சசிகலாவுக்கு 31.9 சதவீதம் பேரும், தினகரனுக்கு 27.7சதவீதம் பேரும், மதிமுகவில் எல்.கணேசனுக்கு 41.7 சதவீதமும், பாமகவில் டாக்டர் அன்பு மணிக்கு 59.4 சதவீதமும் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
அடுத்த முதல்வராவதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு 79.94 சதவீதம் திறமையும், 77.87 சதவீதம் வாய்ப்பும் இருப்பதாக கருத்து கூறிஉள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு 65.46 சதவீதம் திறமையும், 60.84 சதவீதம் வாய்ப்பும் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியை வென்ற விஜய்காந்த்!:
வாய்ப்பு, திறமை வரிசையில் விஜயகாந்துக்கு அடுத்தபடியாகத்தான் ரஜினிகாந்த் வருகிறார்.
நடிகர்கள் தனி கட்சி தொடங்குவதற்கு 68.6 சதவீதம் பேர் எதிர்ப்பும், 30.1 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இதில்விஜயகாந்துக்கு 12 சதவீத ஆதரவும், ரஜினிக்கு 10 சதவீத ஆதரவும் மற்ற நடிகர்களுக்கு 8 சதவீதம் ஆதரவும் உள்ளது.
ரஜினி கட்சி தொடங்குவதை ரசிகர் மன்ற உறுப்பினர்களில் 41.7 சதவீதமும், ரசிகர்களில் 39.4 சதவீதமும், அபிமானம் உள்ளவர்களில் 26.5சதவீதம் பேரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ரஜினி மீண்டும் அரசியலுக்கு வந்தால் ஆதரவு இருக்காது என்பதே 49.6 சதவீத மக்களின்கருத்தாக இருக்கிறது என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.