பயங்கர சேதம்: கலங்கி நிற்கும் தமிழகம்
சென்னை:
இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் கடலைச் சார்ந்த மீனவ கிராமங்கள் தான். இங்கு சுமார் 8 லட்சம் மீனவர்களும் அவர்களதுகுடும்பத்தினரும் கடலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
விசைப் படகுகள், சாதாரண படகுகள், கட்டுமரங்கள் என பல வகையான படகுகள் மூலம் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வருபவர்கள்இவர்கள். இவர்களிடம் 12,000 விசைப் படகுகள், 25,000 படகுகள், 35,000 கட்டுமரங்கள் உள்ளன.
இவற்றில் ஆயிரக்கணக்கானவை சுனாமி அலையால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
மேலும் இவர்களது வலைகளும் பல வகையானவை. வலைகளின் விலை சில ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை உள்ளது. சுனாமிபேரலைகளால் சுமார் 3 லட்சம் வலைகளை காவு கொடுத்துவிட்டு நிற்கிறார்கள் இவர்கள்.
தங்களது அன்றாட குடும்ப வாழ்க்கையை கடலை நம்பி ஓட்டுவதோடு நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதிலும்மீனவர்களின் பணி மகத்தானது. ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து சுமார் 70,000 டன் மீன்கள் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள்மூலமும் விமானங்கள் மூலமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக இரால் ஏற்றுமதியைச் சொல்லலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ. 2,080 கோடியை நாட்டுக்கு ஈட்டித் தந்து வருகின்றனர்மீனவர்கள்.
சுனாமி தாக்குதலுக்குப் பலியானவர்களில் 75 சதவீதத்தினர் மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தான். மற்றவர்கள் மீன் பிடி கிராமப்பகுதிகள், நகர்ப் பகுதிகளில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள். இறந்தவர்களில் 3ல் ஒரு பகுதியினர் குழந்தைகள்.
நாகப்பட்டிணத்தில் மட்டும் 55 மீனவ கிராமங்கள் ஒட்டுமொத்த அழிவைச் சந்தித்துள்ளது. கடலூரிலும் குமரியிலும் தலா 50 கிராமங்கள்கடல் அலைகளால் நிரந்தரமாக அழிந்துவிட்டன. மொத்தமாக இந்தக் கடல் அலையால் ஏற்பட்ட பொருட் சேதம் ரூ. 2,750 கோடி என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்ப கட்ட மதிப்பீடு தான்.
உடனடியாக மீன்துறைக்கு ரூ. 65 கோடியை தமிழக அரசு ஒதுக்கித் தந்துள்ளது.
அதே போல வீடுகளை இழந்துவிட்டவர்களுக்கு 3 லட்சம் வீடுகள் வரை கட்டித் தர வேண்டியுள்ளது.
இலவச டீசல்:
இதற்கிடையே நாகப்பட்டிணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்,
மீனவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பது மிகப் பெரிய சவாலான பணியாகும். இவர்களது விசைப் படகுகளுக்கு தேவையான டீசலைஇலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ தரலாமா என்று யோசித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களை நிச்சயம் கைவிட மாட்டோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் சிலிண்டெர்களை வழங்கிவருகிறோம். தாற்காலிகமாக கூடாரங்கள் அமைக்க ரூ. 10 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் ஷீட்களைத் தந்துள்ளோம் என்றார்.
7 ஏக்கர் நிலம் வழங்கிய வள்ளல்:
இந் நிலையில் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தனது 7 ஏக்கர் நிலத்தை மீனவர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளார். இங்கு மீனவர்கள் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.