சுமத்ரா அருகே மீண்டும் நில நடுக்கம்
டெல்லி:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், இந்தோனேஷியாலும் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பண்டா ஏசே நகரின் மேற்குப் பகுதியில் நேற்றிரவு 10.29 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.ஹாங்காங்கில் உள்ள ஆய்வு மையத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 26ம் தேதி சுமத்ரா அருகே ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் தான் சுனாமி அலைகள் உருவாயின என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் 5.0 முதல் 6.0 ரிக்டர் அளவு வரை சுமார் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்தமானிலும்..
அதேபோல் கிரேட் நிக்கோபார் பகுதியின் மேற்குப் பகுதியில் நேற்று மாலை 06.02 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், இரவு 08.05 மணிக்கு5.4 ரிக்டர் அளவிலும், 08.24 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது.
நாய்களை வைத்து தேடுதல்:
இதற்கிடையே நிக்கோபாரில் மோப்ப நாய்களை வைத்து பிணங்களைத் தேடும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆந்திராவைச்சேர்ந்த பட்டாச்சார்யா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தமானில் நிவாரணப் பார்வைகளை ஒருங்கிணைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின்மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 38 தீவுகளில் மக்கள் தொகை குறைவாக இருக்கும் 30 தீவுகளில் இருந்து மக்கள் அனைவரும் முழுவதும்வெளியேற்றப்பட்டனர். மனோரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டு வருகிறது.
6 மனநல மருத்துவர்கள், 23 உடல்பயிற்சி மருத்துவர்கள், 42 பொது மருத்துவர்கள் உட்பட 94 மருத்துவர்களும், 20 நர்ஸ்களும்பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சர்வதேச நிதியுதவி மாநாடு:
இதற்கிடையே ஜகார்தாவில் கூடிய சர்வதேச நிதியுதவி மாநாட்டில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சுனாமியால் பாதிக்கப்பட்டநாடுகளுக்கு நிதியுதவி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாநாட்டின் தொடக்கத்தில் இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயோனா பேசுகையில், இது நினைவில் என்றும் மறக்க முடியாதஇயற்கை அழிவாகும் என்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் பேசுகையில், இது போன்ற பேரழிவு மீண்டும் ஏற்படாமல் தடுக்க சுனாமி எச்சரிக்கைகருவியை அமைக்க வேண்டும். இந்த சுனாமி அலையை தடுத்து நிறுத்த நமக்கு சக்தியில்லாமல் போய்விட்டாலும், அடுத்த அலையால்ஏற்படும் சேதத்தைத் தடுக்க நம்மிடம் சக்தி இருக்கிறது.
கடந்த 11 நாட்களில் நமது வாழ்வின் கறுப்பு தினங்கள் என்றாலும். அது நமக்கு ஒரு புதிய வெளிச்சத்தை தந்துள்ளது. நம்மிடையே இருந்தவேற்றுமைகள் மறைந்து நம்மை ஒன்றுபடுத்தியுள்ளது என்றார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் காலின் பவல் மற்றும் சீன, ஜப்பான்நாட்டுப் பிரதமர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
உதவ ரஷ்யா தயார்:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமீர் புடீன் தனது இரங்கலைத்தெரிவித்ததோடு, இந்தியாவிற்குத் தேவையான எந்த உதவியையும் அளிக்கத் தயார் என்று கூறினார்.
அதற்கு மன்மோகன் சிங் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையே ரஷ்யாவிலிருந்து நிவாரணப் பொருட்களைஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு விமானம் இந்தியா வருகிறது.
ஜப்பான் உதவி:
இதற்கிடையே சுனாமி அலைகள் முன்கூட்டியே வருவதைக் கண்டறியும் சாதனத்தை அமைப்பதில் இந்தியாவிற்கு உதவத் தயார் என்றுஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பான் தூதர் யசூகுனி எநோகி நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து உதவி பெற வேண்டாம் என்ற இந்தியாவின் நிலையை நாங்கள் மதிக்கிறோம். இந்தியா தனது நிலையை மாற்றிக்கொண்டு, வெளிநாட்டு உதவியைப் பெற முன்வந்தால், ஜப்பான் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது.
இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்த ஜப்பான் அமைச்சர்கள் இந்த மாதம் இந்தியா வருகிறார்கள். ஜப்பான் பிரதமர்ஜூனிசிரோ கொய்சூமி இந்த ஆண்டு இந்தியா வருகிறார். அவர் வரும் தேதி இறுதி செய்யப்படவில்லை.
சுனாமி அலைகளை முன்கூட்டியே கண்டறியும் சாதனத்தை அமைப்பதில் தொழில் நுட்ப உதவி வழங்க ஜப்பான் தயாராக இருக்கிறது.இத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்வதில் எங்களுக்கு உள்ள அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் அலுவலகத்துடன் முதல் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா ஆர்வம்காட்டுகிறது. இது தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மத்திய உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களுடன் நடத்தப்படும்.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிற்கு வழங்கப்படும் கடன் மேலும் உயர்த்தப்படும். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவஜப்பான் 500 மில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கவுள்ளது. மேலும் மீட்புக்குழுவினரை ஜப்பான் அரசு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது என்று கூறினார்.