விசாரணையை குலைக்கவே ஜாமீன் மனுக்கள்: ஜெ.
சென்னை:
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சங்கரராமன் கொலை, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது உள்ளிட்டவழக்குகளில் காஞ்சி சங்கர மடம் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்தே ஜெயேந்திரர் கைது செய்யப்படும்நிலை உருவானது.
இதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதை பாஜக தனது மறுவாழ்விற்காக கையில் எடுத்துள்ளது. இந்தவிவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது நியாயமற்ற செயல். இத்தகைய போக்கை பாஜக கைவிட வேண்டும்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் எவ்வித விருப்பும், வெறுப்பும் இல்லை . பதவிப்பிராமணத்தின்போது எடுத்தஉறுதிமொழியின்படி நான் நடந்து வருகிறேன். சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதில்வேண்டியவர் , வேண்டாதவர், மடாதிபதி, நாத்திகர் என்றெல்லாம் பார்க்க முடியாது.
மாநில முதல்வர்- மற்றும் காவல்துறை அமைச்சர் என்ற முறையில் தேவையான குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே எனதுகவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அதுபோலத்தான் ஜெயேந்திரர் தொடர்பான வழக்குகளிலும் விசாரணை பற்றியவிவரங்கள் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. அவற்றைத் தெரிந்து கொள்ள நான் ஆர்வம் காட்டவும் இல்லை.
வேறு ஏதாவது ஒரு கொலை வழக்கில் சட்டம் அதன் கடமையை செய்யாவிட்டால் இவர்கள் என்ன பேசியிருப்பார்கள், என்னஎழுதியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். நடைபெற்றது ஒரு கொலைக் குற்றம். சம்பந்தப்பட்ட நபர்களைசட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் எவ்வாறு கருணை காட்ட முடியும்?
புலன் விசாரணை சரியான கோணத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக அடிக்கடி ஜாமீன் மனுக்களும், வீண் விளம்பரங்களும்,புலன் விசாரணை அதிகாரிகள் சோர்வடையும் விதத்தில் அவர்களை பற்றிய அவதூறு செய்திகளும், வேண்டுமென்றே தொடர்ந்துசெய்யப்பட்டு வருகின்றது.
இந்த சதிச்செயல்களை முறியடிக்க வேண்டியதும் இந்த அரசுக்கு மேலும் ஒரு சுமையாக சேர்ந்துள்ளது.
இந்துமத தர்மத்தை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சங்கர மடத்தில், அதன் பீடாதிபதிகள், இந்து தர்மசாஸ்திரத்திலிருந்து விலகிச் சென்று கொலைக் குற்றவாளியாக மாறியது யாரும் எதிர்பார்த்திருக்கக் கூடியது அல்ல.
ஒரு சில பத்திரிக்கைகளும், சில அரசியல் கட்சிகளும், அரைகுறை சட்டம் படித்து விட்டு நீதிமன்றத்தில் குதர்க்க வாதம்புரிவதையே வாழ்நாள் தொழிலாகக் கொண்டுள்ள சிலரும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை பொது மக்கள் உணரவேண்டும்.
மடாதிபதிகள் என்றாலும் புலன் விசாரணை நடந்து வரும் போது நீதிமன்றம் கூட அதில் தலையிட முடியாது.
ஆனால் பாஜகவினர் வழக்கை நான் வாபஸ் பெறவேண்டும் என்றும், வழக்கு நடைபெற்ற முறைக்கு நான் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.
மதத் தலைவர் சட்டத்திற்கு மேம்பட்டவர் என்றும், அவருக்கு எதிராக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும்பாஜகவினர் எண்ணுகின்றனர். ஆனால் மத சார்பற்ற நமது அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளநான், நம் நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான அவர்களது வேண்டுகோளை எவ்வாறு ஏற்க இயலும்?
இத்தனை இடைஞ்சல்களையும் மீறி இந்த மாநில அரசு சட்டம் ஒழுங்கை சீரான முறையில் பராமரிக்கும் என்பதை உறுதியாகத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications