அமைச்சர் பாண்டுரங்கனுக்கு ஜெ பாராட்டு மழை
சென்னை:
தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தை பேணி வளர்க்கும் பேரியக்கம் அதிமுக என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அமைச்சர் வளர்மதி, அமைச்சர் பாண்டுரங்கனின் சகோதரர் மகன், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான துரைராஜின் மகன்ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று திருமணம் நடத்தி வைத்தார்.
ஒரே மண்டபத்தில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜெயலலிதா, தாலி எடுத்துத் தந்து, அட்சதை தூவி மணமக்களைவாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
அரங்கம் முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுவதைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சி தானே என் மகிழ்ச்சி.
அதிமுக என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தில் உள்ளதைப் போல், தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே அன்பும் பாசமும் வேறுஎந்த இயக்கத்திலாவது இருக்கிறதா?. இது கழகத்தின் குடும்பத் திருமண நிகழ்ச்சி.
பேச்சாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி கழகத்தின் பல்வேறு பொறுப்புக்களை வகித்து, இன்று அமைச்சராக உயர்ந்திருக்கிறார்அருமை சகோதரி வளர்மதி. கடின உழைப்பும், திறமையும் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் ஒரு பேச்சாளர் கூடஅமைச்சராகலாம் என்பதற்கு சகோதரி வளர்மதியே எடுத்துக்காட்டு.
புரட்சித் தலைவர் மறைந்த பின் சில துரோகிகள் கழகத்தை உடைத்தார்கள். எப்படியாவது அரும்பாடுபட்டு கழகத்தை காக்க வேண்டும்என்று நான் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், இழந்த தலைமைக் கழகத்தையும் மீட்ட நேரத்தில், மீண்டும் சில புல்லுருவிகள் கழகத்தைஉடைத்து தனி அணி தொடங்கினார்கள்.
நானும் ஒரு மனிதப் பிறவி தானே? எனக்கும் கவலைகள், உணர்ச்சிகள் எல்லாம் உண்டு. அந்த நேரத்தில் கவலைப்பட்டு, வீட்டில்உட்கார்ந்திருந்தேன். ஏராளமான தொண்டர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.
அப்போது அமைச்சர் பாண்டுரங்கனும் அங்கே வந்தார். என் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ பேச ஆரம்பித்தார். அது ஒரு மிகஅருமையான சொற்பொழியாக அமைந்துவிட்டது.
சோர்வடைந்த ஒருவருக்கு மனோதத்துவ நிபுணர் தெம்பூட்ட, தைரியமூட்ட, உற்சாகமூட்ட எப்படிப் பேசுவாரோ அந்தரீதியில் எனக்குஆறுதல் கூறும் வகையில் பாண்டுரங்கனின் பேச்சு அமைந்தது.
அவர் பேசி முடித்தபோது என் கவலை எல்லாம் பறந்தோடிவிட்டது. எனக்கு புதிய தெம்பும் உற்சாகமும் தைரியமும் பிறந்தது.
வளர்மதி, பாண்டுரங்கன் ஆகிய கழகத்தின் முன்னோடிகளுடன் சேடப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும் மதுரை புறநகர் மாவட்ட அவைத்தலைவருமான துரைராஜின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது.
தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தை பேணி வளர்க்கும் பேரியக்கம் அதிமுக. இலக்கியம் படிப்பது சிறந்தது. நமதுசொந்த வாழ்வையே இலக்கியமாக்கிக் கொள்வது மிகவும் சிறந்தது.
இலக்கியம் போல இனிமையாக, அழகாக இந்த மண மக்களின் வாழ்க்கை அமையட்டும். பிறர்க்கு வழிகாட்டும் வகையில் உங்கள் வாழ்வுவிளங்கட்டும் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து உள்பட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.