ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை!
சென்னை:
காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சரின் பதக்கம் வழங்கும் விழாவின்போது குட்டிக் கதை சொல்லிகாவல்துறையினருக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலலிதா கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர்பேசும் போது சொன்ன குட்டிக் கதை:
ஒரு ஊரில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் ஏராளமான அளவில் கூடியிருந்தனர். அப்போது திடீரெனவானத்திலிருந்து ஒரு தங்கத் தட்டு கோவில் முன்பாக விழுந்தது.
அதைப் பார்த்ததும் எல்லோரும் அதை நோக்கி ஓடி வந்தார்கள். அந்தத் தங்கத் தட்டு யாருக்கு என்பதில் சர்சசை எழுந்தது.கோவிலுக்கு சொந்தமா அல்லது பக்தர்களில் யாருக்காவது அதை கொடுக்கலாமா என்று விவாதம் எழுந்தது.
அப்போது கோவில் நிர்வாகி தட்டை எடுத்துப் பார்த்தார். அதில், அன்பில் சிறந்தவர் யாரோ, அவருக்கு ஆண்டவன் பரிசு என்றுஎழுதப்பட்டிருந்தது. இதையடுத்து நான்தான் அன்பில் சிறந்தவன் என்று கூட்டத்தினர் மாறி மாறி கூறத் தொடங்கினர்.
இதையடுத்து கோவில் நிர்வாகி ஒரு முடிவுக்கு வந்தார். அடுத்த நாள் பகல் 12 மணிக்கு வந்து தாங்கள் செய்த அன்புச் செயலைசொல்லி தங்கத் தட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பக்தர்களிடம் அறிவித்தார். அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீட்டுக்குப் போன ஒவ்வொருவரும் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். தங்கத் தட்டை எப்படிப் பெறலாம் என்பதுதான்அவர்களது ஒரே சிந்தனையாக இருந்தது. தூக்கமே வரவில்லை அவர்களுக்கு.
மறு நாள் பகல் 12 மணி. எள் போட்டால் கீழே விழாதபடி ஏகப்பட்ட கூட்டம். ஒவ்வொருவரும் தங்களது அன்புச் செயலைவிவரிக்க வந்தார்கள்.
ஒரு பணக்காரர் வந்தார். நான் எனது சொத்தில் ஏராளமான பங்கை ஏழைகளுக்குத் தர்மம் செய்து வருகிறேன் என்றார்.அவருடைய அன்பு நெஞ்சத்தை உணர்ந்த நிர்வாகி அவருக்கே தங்கத் தட்டை அளித்தார்.
சிலருக்குச் சந்தேகம். அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று பொய் சொல்லிக் கூட தங்கத் தட்டைத் தட்டிச் சென்று விடலாமே.இந்த பணக்காரர் ஏராளமாகத் தானம் செய்கிறார் என்பதை எப்படி நம்புவது? அதற்கு என்ன சாட்சி?
இப்படி கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோதே பணக்காரர் கையில் இருந்த தங்கத் தட்டு தகரமாகிவிட்டது. ஓகோ, தகுதியில்லாதவர் கைக்குப் போனால் தங்கத் தட்டு இப்படி தகரத் தட்டாகிப் போய்விடும் போலும் என்றுஎல்லோரும் பேசத் தொடங்கினார்கள்.
இதையடுத்து தங்கத் தட்டை எப்படியாவது தட்டிச் செல்ல, அந்த ஊருக்குப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வந்து, அங்கே இந்தஏழைகளுக்கு வாரி வாரி வழங்க ஆரம்பித்தார்கள். அடித்தது யோகம் பிச்சைக்காரர்களுக்கு. அந்தக் கோவிலை நோக்கி அக்கம்பக்கத்திலிருந்த பிச்சைக்காரர்களும் வரத் தொடங்கினார்கள்.
ஏழைகள் எல்லோருக்கும் பொருள் ஏராளமாகக் கிடைத்தது. எந்தக் குறையும் இல்லை. பாவம், பணக்காரர்கள்தான் வந்து வந்துபணத்தைத் தந்து நொந்து போனார்கள். அவர்கள் கையில் சென்றதுமே தங்கத் தட்டு தகரத் தட்டு ஆனது.
நாட்கள் நகர்ந்தன, பல நாட்கள், பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் தகுதியான ஒருவர் வரவும் இல்லை, தங்கத் தட்டைப்பெறவும் இல்லை. ஆனால் தினசரி கோவிலில் கூட்டத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை.
ஒரு நாள் ஒரு கிராமத்தான் வந்தான். அவனுக்குத் தங்கத் தட்டு சமாச்சாரம் எதுவும் தெரியாது. கோவிலில் சாமி கும்பிட வந்தவன்,வெளியில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஐயோ என் நாட்டில் இத்தனை ஏழைகளா? பார்க்கவேபரிதாபமாக இருக்கிறதே என்று சொல்லி அழுதான்.
கை கால் இழந்தவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், ஊமைகள் இவர்களை எல்லாம் பார்த்து அவனது உள்ளம் பதறியது,உருகியது. கதறி அழுதான். உடனே கோவில் சாமியைப் பார்த்து, இந்தக் கொடுமைகளுக்கு விமோசனமே இல்லையா என்றுகேட்க உள்ளே ஓடினான்.
அப்போது கோவில் நிர்வாகி அங்கு இருந்தார். அவரது கையில் தங்கத் தட்டு இருந்தது. கூட்ட நெரிசலில் தட்டை அவர் தவறவிட்டார். கீழே நின்ற கிராமத்தான் கையில் அது விழுந்தது. உடனே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
தங்கத் தட்டு அப்படியே இருந்தது, தகரமாக மாறவில்லை. முன்னைவிட மூன்று மடங்கு ஜொலித்தது. கோவில் நிர்வாகிக்குமட்டற்ற மகிழ்ச்சி, ஐயா, நீ தான் உண்மையான அன்பின் வடிவம். உனக்குத்தான் இந்த தங்கத் தட்டு சொந்தம் என்று கூறிஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
யாருடைய உள்ளம் ஏழை எளியவருக்கு உருகுகிறதோ, யாருடைய நெஞ்சம் மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்ணாகஇருக்கிறதோ, அவரே அன்பிற் சிறந்தவர் என்பதுதான் இக் கதையின் கருத்து.
மனிதாபிமான உணர்வே தலை சிறந்தது என்பதை இக்கதை விளக்குகிறது. அந்த மனிதாபிமான உணர்வை, மனிதாபிமானசெயல்பாட்டை காவல்துறையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் என்றார் ஜெயலலிதா.