கலர் டிவி திட்டத்தில் முறைகேடு-அதிமுக:தூக்கு மேடைக்கு போக தயார்-கருணாநிதி
சென்னை:கலர் டிவி திட்டம் குறித்து இன்று சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது. அதிமுக புகாருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் சபையில் அமளி நிலவியது.
சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
விவாதத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், டிவி இல்லாத அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்படும் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யார் யாரிடம் டிவி இல்லை என்று அரசு சார்பில் கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்பட்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும்.
பொதுவாக அரசின் திட்டங்ளுக்கு ஒருமுறைதான் அறிமுக விழா நடத்தப்படும். ஆனால் இலவச டிவி திட்டத்துக்கு முதல் கட்டம், 2வது கட்டம், 3வது கட்டம் என பல கட்டங்களாக விழா நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது அரசு.
கடந்த மாதம் 1ம் தேதி கணக்குப்படி 4 லட்சம் டிவிக்கள் தரப்பட்டுள்ளாக அரசு கூறுகிறது. ஒரு டிவியின் விலை ரூ. 3000 என்று வைத்துக் கொண்டாலும் கூட இதற்காக ரூ. 130 கோடி செலவழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ரூ. 564 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அரசின் செயல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கூடுதல் நிதி எங்கே போனது, இதில் பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றார். ஜெயக்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பி கோஷமிட்டனர்.
அந்த சமயத்தில் அவை முன்னவரான நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியுள்ளார் ஜெயக்குமார் என்றார்.
அதற்குப் பதிலளித்த அதிமுக கொறடா செங்கோட்டையன், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவதால் எந்தத் தவறும் நேர்ந்து விடாது என்றார்.
ஆனால் ஜெயக்குமாரை தொடர்ந்து பேச விடாமல் அவரை அமருமாறு கூறினார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
தூக்கு மேடைக்கு போக தயார்: கருணாநிதி
அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி,
தம்பித்துரை பேசும்போது அதிமுக ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சியடைந்ததாக கூறினார்.
ஆனால் மத்திய அரசு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் 2001ம் வருடம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் 3வது இடத்தில் இருப்பதாகவும், 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் தொழில்வளர்ச்சியில் 7வது இடத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என கூறினார். மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களிலும் டைடல் பார்க் அமைக்கவும், பல்வேறு தொழில்களை தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜெயகுமார் இலவச டிவி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினார். இத்திட்டத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்க கூடாது என்பதற்காக, அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு அமைத்து திறந்தவெளி டெண்டர்கள் எடுக்கப்பட்டு தொலைகாட்சிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு, யார் யாருக்கு இலவச டிவி வழங்கவேண்டும் என்பது குறித்து முடிவு செய்தது.
அனைத்து கட்சி உறுப்பினர்களும், பங்கேற்ற குழுவில் அதிமுக, மதிமுக உறுப்பினர்களையும் பங்கேற்கும்படி அழைத்தோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இலவச டிவி வழங்கியதில் சிறிய தவறும் நடக்கவில்லை.
அப்படி நடந்திருந்தால் நான் தூக்குக்கு போக தயாராக இருக்கிறேன் என்றார்.