அடுத்த வாரிசு கருத்துக் கணிப்பு தேவையா?
சென்னை:முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது திமுகவினரால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், அதுபோன்ற ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது அவசியமா என்ற கேள்வியை பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் எழுப்பியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் அவரது அடுத்த வாரிசு யார் என்ற கேள்வியைக் கேட்பதே முதலில் சிறுபிள்ளைத்தனமான ஒரு விஷயமாக திமுகவினரால் கருதப்படுகிறது.
காரணம், ஸ்டாலின்தான் கருணாநிதியின் வாரிசு என்பது திமுகவினரால் ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில் (சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வந்தபோதிலும் கூட), மு.க.அழகிரியும் அதை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அந்தக் கேள்வியை கேட்டு ஏன் ஒரு கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கேள்விதான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மாநிலத்தில் கருணாநிதி, மத்தியில் முரசொலி மாறன் என்பது நீண்ட காலமாக திமுகவில் நிலவி வந்த ஒரு வழக்கம். அதேபோல மாநிலத்தில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், மத்தியில், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என்பது கருணாநிதி எடுத்த முக்கிய முடிவு.
இந்த முடிவை திமுகவினரில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தயாநிதி மாறனை தூக்கி விடுவதை மு.க.அழகிரி ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்தார்.
குறிப்பாக தயாநிதி மாறனுக்கு 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்தபோது அதை எதிர்த்து வெளிப்படையாகவே கருணாநிதியிடம் கருத்து தெரிவித்தாராம் அழகிரி. இருப்பினும் அவரை சமாதானப்படுத்தினார் கருணாநிதி.
அதேபோல ஸ்டாலினுக்கும் அவருக்கும் நீண்ட காலமாக புகைச்சல் இருந்து வந்தது. இதன் காரணமாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் (தூத்துக்குடி நீங்கலாக) ஸ்டாலினால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
மேலும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கே அதிக ஆதரவு கொடுத்ததாலும், தனது ஆட்களை கட்சி மேலிடம் புறக்கணித்ததாலும் அதிருப்தி அடைந்த அழகிரி, 2001 சட்டசபைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக நிறுத்தி திமுக வேட்பாளர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்தார்.
இதையடுத்து அழகிரியுடன், ஸ்டாலின் சமரசத்திற்கு வந்தார். இருவரும் சந்தித்துப் பேசி இணைந்து செயல்படவும் முடிவு செய்தனர். அத்தோடு பிரச்சினை முடிந்ததாகத்தான் திமுகவினரும், கருணாநிதியும் நினைத்தனர்.
ஆனால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உருவில் புதிய பிரச்சினை வந்தபோது மீண்டும் ஒரு தலைவலியை திமுக சந்தித்தது. அழகிரியை மாறன் சகோதரர்கள் முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்தனர். இது அழகிரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
மாறன் சகோதரர்களின் வளர்ச்சி அழகிரியை மட்டும் பாதிக்கவில்லை. ஸ்டாலின், ஏன், கருணாநிதியையும் கூட அது சற்றே உரசிப் பார்த்தது. நான் சொல்வதை சன் டிவி கேட்பதில்லை என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதியே சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.
அதேபோலத்தான் ஸ்டாலினையும் ஒரு தூரத்தில் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது சன் குழுமம். இப்படி கருணாநிதி குடும்பத்திற்கும், சன் டிவிக்கும் இடையிலான தூரம் அதிகரித்து வந்த நிலையில் இப்போது மதுரையில் அது பெரும் குண்டாக வெடித்து கட்சிக்கும், கருணாநிதிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.
குடும்பமா, கட்சியா என்ற பெரும் குழப்பத்தில் கருணாநிதியை தள்ளி விட்டிருக்கிறது மதுரை வன்முறை. உண்மையில், சன் குழுமத்தால் கருணாநிதிக்கு பெரும் தர்மசங்கடம்தான்.
கர்நாடகத்தில் உதயா, கேரளாவில் சூர்யா, ஆந்திராவில் ஜெமினி என சன் குழுமத்தின் சானல்கள் வியாபித்து பெரும் சாம்ராஜ்யமாக மாறி நங்கூரமிட்டு நிற்கின்றன. இங்கெல்லாம் சானல்களை நிர்வகிப்பது கருணாநிதி குடும்பத்தினர்தான்.
எனவேதான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என எதிலுமே உறுதியான, சம்பந்தப்பட்ட மாநிலங்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் ஈடுபட முடியாமல், கருணாநிதி தயங்குகிறார், தடுமாறுகிறார், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். இதே புகாரைத்தான் ஜெயலலிதாவும் சமீப காலமாக மிகக் கடுமையாக கூறி வருகிறார். இதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
கருணாநிதி சில முக்கிய முடிவுகளை, உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. அவர் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறார், என்ன முடிவு எடுக்கப் போகிறார், எப்படி இதை அணுகப் போகிறார் என்பதை திமுகவினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.