என்னை கவர்ந்த அரசியல்வாதிகள்-கருணாநிதி
சென்னை:திமுக அரசு பதவியோற்ற ஒரு ஆண்டில் தேர்தல் வாக்குறிகளை 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி
திமுக அரசின் ஓர் ஆண்டு நிறைவு உங்களுக்கு முழு மன நிறைவை கொடுத்துள்ளதா?
திமுக அரசின் ஒர் ஆண்டு நிறைவு முழு மன நிறைவை கொடுத்துள்ளது. இந்த ஒராண்டில் தேர்தல் வாக்குறிதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆண்டு ஒன்று அளவற்ற சாதனைகள் என்ற நிலையை அடைந்துள்ளோம்.
உங்கள் பணி பளுவை குறைக்கும் பொருட்டு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுமா?
பணியைப் பளுவாக நான் என்றைக்கும் நினைத்ததில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கேற்ப நிறைய பணிகளை ஏற்று தெடார்ந்து பணியாற்றுவதென்பது எனக்கு புதிதல்ல. அது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும்.
அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆற்றுக்கூடிய அளவுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்கட்சியான அதிமுக தொடர்ந்து திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று கூறிவருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுமா?
திமுக தோழமை கட்சிகளின் எழுத்துப்பூர்மாக ஆதரவுடன் அமைந்துள்ள அரசை அதிமுகவினர் மைனாரிட்டி அரசு என்று சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேலி பேசுவதாகும். மைனாரிட்டி அரசு என்றால் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து தோற்கடிக்கலாமே என்று பலமுறை விடுத்த அறைகூவலையும் ஏற்றுக் கொள்ளும் மனவலிமை அவர்களுக்கு இல்லை.
கடந்த சில மாதஙகளாக விடுதலைப் புலிகளின் நடவடிக்கை கட்டுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது புலிகள் வான்படை வலுப் பெற்றிருப்பது, தமிழகத்துக்கு கவலை அளிப்பதாக உள்ளதா? இதற்காக என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகின்றன?
வான்வழிக் கண்காணிப்பும், கடலோரப் பாதுகாப்பும் மேலும், மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசே அறிவித்துள்ளது.
தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க எழுந்துள்ள சர்ச்சை குறித்து திமுகவின் நிலை என்ன?
கழக முன்னணியினரோடு கலந்து பேச வேண்டும். தோழமைக் கட்சி தலைவர்களின் கருத்து அறிய வேண்டும். அதன் பின்னரே கழகத்தின் நிலைப்பாடு உருப்பெறும்.
தேசிய மற்றும் மாநில அளவில் உங்களை கவர்ந்த அரசியல்வாதிகள் யார்?
பெரியார், அண்ணா, காமராஜர், இந்திராகாந்தி அம்மையார், பாபு ஜெகஜீவன் ராம், ராஜாஜி, காயிதே மில்லத், வி.பி.சிங், ப.ஜீவானந்தம், சோனியாகாந்தி, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர்.
மாநில அளவில் இருந்த திமுக. இப்போது தேசிய அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறது. வருங்காலத்தில் திமுகவை எப்படி பார்க்கிறீர்கள்?
வருக்காலத்திலும் திமுக இப்போது இருப்பதை விட மேலும் மேலும் வளர்ந்து செல்வாக்கு பெறும்.
நீங்கள் கேட்கும் நிதி ஒதுக்கீடை மத்திய அரசு வழங்குவதாக கருதுகிறீர்களா?
இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எங்கள் வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகிறது. அந்த அரசில் நாங்களும் ஒரு அங்கம்.
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்யுமா? மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறதா?
மத்திய அரசு தனது முழு பதவி காலத்தையும் நிச்சயமாக பூர்த்தி செய்யும், அதில் எந்த அச்சமும் இல்லை. அதன் செயல்பாடுகளில் நான் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மக்கள் கூட திருப்தியாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக மூலையில் முடங்கி கடந்த பல நல்ல திட்டங்கள் எல்லாம் இப்போது செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் யாரை சிறந்த முதல்வராக கருதுகிறீர்கள்?
இந்த கேள்விக்கே இடமின்றி சிறந்த முதல்வர் அண்ணா தான். ஆனால் அவர் மிக குறுகிய காலமாக 2 வருடங்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தார். எனவே தமிழகம் அவரது முழு சேவையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. காமராஜரும் சிறந்த முதல்வர் தான். அவர் 9 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போதுள்ள கூட்டணி 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தெடாருமா? அல்லது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா?
இப்போதுள்ள கூட்டணி தொடருவதில் எந்த ஒரு சிறு பிரச்சனையும் இல்லை. திமுகவை பொறுத்தவரை கூட்டணி திருப்பதிகரமாகவே உள்ளது என்றார் கருணாநிதி.