ஸ்டான்லியில் விஷக் காய்ச்சல் பரவவில்லை - அமைச்சர்
சென்னை:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சல்தான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருவாரங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் தாக்கி உத்தரப்பிரதேசத்தை கரீமா பிரதான் என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பல மாணவ-மாணவிகள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்தனர்.
இந்த மர்ம காய்ச்சலுக்கு காரணம் மருத்துவக்கல்லூரி வளாகத்தை சுற்றிலும் உள்ள சுகாதார சீர்கேடுதான் காரணம் என்று தெரியவந்தது. இதனால் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு அனைத்துப் பணிகளும் செப்பனிடப்பட்ட பின்னர் கடந்த 4ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
நேற்று கல்லூரிக்கு செல்ல தயாராக இருக்கும் நிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேரும், நர்சிங் படிக்கும் மாணவிகள் 4 பேரும் மீண்டும் மர்ம காய்ச்சல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் இந்த மர்ம காய்ச்சல் பற்றி இந்திய மனித உரிமை ஆணையம் உண்மை நிலவரம் குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசின் சுகாதார துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில், இன்று அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலோ அல்லது வேறு மருத்துவக் கல்லூரியிலோ எந்தவிதமான மர்மக் காய்ச்சலும் பரவவில்லை. இதுதொடர்பாக பீதி அடையத் தேவையில்லை.
காய்ச்சல் என்று கூறியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேறு யாருக்கும் காய்ச்சல் பரவி விடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை. இது சாதாரண காய்ச்சல்தான்.
தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு மாநில சுகாதாரத் துறை செயலாளர் உரிய பதிலை அனுப்புவார்.
தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளை 33 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவக்கல்லூரிகளையும் சுத்தமாக வைத்திருக்குமாறு அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதன்படி கல்லூரி இடைவேளை நேரத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக ரூ.4 கோடி செலவில் பயோ-வேஸ்ட் எனும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் காலியாக உள்ள மருத்துவம் அல்லாத பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கப்ப்டடுள்ளது.
மேலும் 18 கோடி ரூபாய் விடுதிகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையிலுள்ள சிஎம்சி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு தலா 25 கோடி ரூபாய் புதிய விடுதிகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அடுத்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications