பெங்களூரில் நாய் மீது விமானம் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் நேற்று கிங்பிஷர் விமானம் கிளம்பியபோது ரன்வேயில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் அதன் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பல மணி நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 29 பயணிகளுடன் கிங் பிஷர் விமானம், ஹைதராபாத்துக்குக் கிளம்பியது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது திடீரென ஒரு நாய் ரன்வேயில் ஓடிவந்து விமானத்தின் முன் சக்கரத்தில் மோதியது. இதனால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.
நாய் மோதியதால் விமானத்தின் முன் சக்கரம் உடைந்து போனது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் விமானத்திற்குள் இருந்த 2 பயணிகள் லேசான காயமடைந்தனர். உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டனர்.
விமான நிலையமும் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பல மணி நேரமாகியும் விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற விமானமும் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.
பல மணி நேரமாக விமானங்கள் கிளம்பாததால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். விமான நிலைய அதிகாரிகள் முறையான தகவல்களைக் சொல்லாமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அதிகாலையில்தான் விமானப் போக்குவரத்து சீரடைந்து விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications