அணு ஒப்பந்தம்: இடதுசாரி கெடு முடிகிறது - சோனியா ஆலோசனை!
அணு சக்தி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது இடதுசாரிகளின் ஒரே கோரிக்கை.ஆனால் அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பது பிரதமர் மன்மோகன்சிங்கின் ஒரே கருத்து. இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றிட வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எண்ணம்.
ஆனால் இது எதற்குமே சாத்தியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து தோழமைக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வரும் காங்கிரஸ் மறுபக்கம், முதல்வர் கருணாநிதியின் மூலமாக இடதுசாரிகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
25ம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும்போது அணு சக்தி ஒப்பந்தத்ைத கைவிடும் முடிவை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதரவை வாபஸ் பெறுவது உறுதி என்று இடதுசாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், நாளை நடைபெறவுளள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சமரசம் ஏற்படுமா அல்லது இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மாயாவதி தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் மத்திய அரசு பெரும் இக்கட்டான நிலையில் உள்ளது. இடதுசாரிகளும் ஆதரவைத் திரும்பப் பெற்றால் மத்தியஅரசு மைனாரிட்டியாக மாறி விடும். எனவே காங்கிரஸ் இந்த சிக்கலை எப்படித் தவிர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சோனியா அவசர ஆலோசனை:
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முக்கிய விவாதத்தை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், சரத்பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் திடீர் தேர்தலை சந்திக்கலாமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட்டு விடலாமா என்று நேரடியாகவே சோனியா கேட்டதாக தெரிகிறது.
ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு முக்கியமானது. எனவே அதை கைவிடுவது சரியாக இருக்காது. அதேசமயம், இடதுசாரிகளின் ஆதரவைப் பெற இன்னும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.
பவாருடன் காரத் சந்திப்பு:
இந்தக் கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் சரத்பவாரை, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பேசப்பட்ட விவரம் குறித்து வெளியிடப்படவில்லை.
எனவே நாளைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் என்ன முடிவு எட்டப்படும் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது.
முலாயம் கட்சி என்ன செய்யும்?
இதற்கிடையே, இடதுசாரிகள் ஒருவேளை ஆதரவை திரும்பப் பெற்றால் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்சிக்கு 39 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இக்கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் இதுகுறித்துக் கூறுகையில், நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஒருபோதும் சொல்லவில்லை. அது வெறும் வதந்தியே.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்த எங்களது நிலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் ஏற்கனவே 3வதுஅணியை அமைத்துள்ளோம். ஒருவேளை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்போம் என்றார்.
இதனால் முலாயம் சிங்கட்சியின் நிலையும் குழப்பமாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிைலயில் காங்கிரஸ் கட்சியிடம் ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே மிஞ்சியுள்ளது. அது, முதல்வர் கருணாநிதி இடதுசாரிகளை சமாதானப்படுத்தி, ஆட்சியைக் காப்பாற்றுவார் என்பது. அது நிறைவேறுமா என்பது நாளைக்குள் தெரிந்து விடும்.
--