தங்கபாலு வேண்டாம்- 'பாதி மொட்டை', 'பாதி மீசை'!
விழுப்புரம்: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டதை எதிர்த்து சேலம், விழுப்புரம் உள்பட சில வட மாவட்டங்களில் வாசன் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சேலத்தில் மொட்டை போட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மறக்காமல் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியையும் கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தனக்கோ அல்லது தனது ஆதரவாளரானோ ஞானதேசிகனுக்கோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன். ஆனால் எதிர்பாராதவிதமாக தங்கபாலு தலைவராகி விட்டார். இதனால் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பெரும் அப்செட் ஆகியுள்ளனர்.
குறிப்பாக சேலம் மாவட்ட ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் தங்கபாலுவுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழ் மாநிலகாங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியபடி இவர்கள் போராடி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு ஓமலூரில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தொகுதிப் பக்கமே வராத தங்கபாலு தலைவரா, ஏற்கவே முடியாது என்று கண்டனம் ெதரிவித்தனர். மீண்டும் தமாகவை உருவாக்கும் நிலைக்கு கட்சி தள்ளி வருவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
நேற்று, காங்கிரஸ், கட்சியின் இளைஞர் பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு, மகளிர் அணி, மாணவர் அணி, சேவாதள காங்., காங்., ஐக்கிய அணி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த உண்ணாவிரதத்துக்கு கிழக்கு மாவட்ட காங்., பொது செயலர் உலகநம்பி தலைமை வகித்தார். மாநகர தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மேற்கு மாவட்ட காங்., பொது செயலர் ராஜேந்திரன், சேவாதள மகளிர் அணி அமைப்பாளர் தங்கம், சியாமளா, அருள்தாஸ், சேதுராமன், நாகராஜன், மணிவண்ணன், ஜெயபால் மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
தங்கபாலு தலைமையை எதிர்க்கும் விதமாக, உண்ணாவிரத பந்தலின் பின்புறம் காமராஜ், குமார், சந்தோஷ்குமார், சுந்தரம் ஆகிய நான்கு பேர் தலையை மொட்டை அடித்து, பின் உண்ணாவிரதத்தில் வந்து அமர்ந்தனர். உண்ணாவிரத பந்தலின் முன் அமர்ந்து, கிழக்கு மாவட்ட காங்., பொது செயலர் உலகநம்பி தனது தலையை பாதி மொட்டை அடித்து, பாதி மீசையை எடுத்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், வாசன் ஆதரவாளர்கள் தமாகா கொடியுடன் போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில், தமாகா கொடியேற்றி வாசன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இனிமேல் நாங்கள் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியைச் ேசர்ந்தவர்கள் என்று உள்ளூர் காங்கிரஸ் கவுன்சிலர் மோகன் அறிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
உளுந்தூர்ப்பேட்டை, சங்கராபுரம் பகுதிகளிலும் தமாகா கொடியேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கொடிகளை கம்பங்களிலிருந்து இறக்கி விட்டனர்.
தங்கபாலுவின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து தங்கபாலுவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.
சோனியா-தங்கபாலு சந்திப்பு:
இந்த நிலையில், தங்கபாலு, நேற்று காலை, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். காலை 10.50 மணியில் இருந்து 11.10 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
தலைவர் பொறுப்பேற்றபோது மேலிடப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.பி.,க்கள் பிரபு, ஞானதேசிகன், ஆரூண்,ராணி, எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், யசோதா, பீட்டர் அல்போன்ஸ்மற்றும் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்ததாகவும், மத்திய அமைச்சர்கள் மணிசங்கள் அய்யர், இளங்கோவன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாகவும் சோனியாவிடம் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியையும் தங்கபாலு சந்தித்தார். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, காங்கிரசின் வளர்ச்சி, எதிர்காலத்தில் கட்சியை பலப்படுத்த எடுத்துச் செல்லும் முயற்சிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தங்கபாலு இருவரிடமும் தெரிவித்தார்.