இந்திய சுற்றுலா வரைபடத்தில் விரைவில் குற்றாலம்-சுரேஷ் ராஜன்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நேற்று மாலை தொடங்கியது.
நெல்லை மாவட்ட கலெக்டர் பொறுப்பு சீனிவாசன் தலைமை தாங்கினார். எம்எல்ஏ வீ.கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி சுற்றுலா துறைக்கு அதிக நிதி ஒதுக்கிடு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுற்றுலா தலங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரியில் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.
நெல்லை மாவட்டத்தில் மத்திய மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன. ஊட்டி, காஞ்சிபுரம், மதுரை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறை விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் குற்றாலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.88 லட்சம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் குண்டாறு அணை மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகளுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்டங்கள் தோறும் சுற்றுலா தலங்களில் நடைபெற்று வருகின்றன.
திமுக ஆட்சியில் குற்றாலத்தின் தரம் உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு சாரல் திருவிழாவிற்குள், இந்திய சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் பேசியுள்ளேன். கடிதம் மூலமும் தெரிவித்துள்ளேன். அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இந்திய சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை சேர்ப்பது குறித்து நிச்சயம் ஆராயப்படும். மத்திய, மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கலந்துரையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் குற்றாலத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
மத்திய அரசிடம் இருந்து 3 விருதுகளை தமிழக சுற்றுலாத் துறை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.