சூடான் விமானம் கடத்தல்-95 பயணிகள் விடுதலை, பணயக் கைதிகளாய் 7 சிப்பந்திகள்

Subscribe to Oneindia Tamil

Boeing 737
கார்டோம்: சூடான் நாட்டில் 102 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டது. அந் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் டார்பர் பகுதியைச் சேர்ந்த சூடான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இதைக் கடத்தினர்.

லிபியாவில் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 95 பயணிகளையும் தீவிரவாதிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவித்தனர். ஆனால், விமானிகள் உள்ளிட்ட 7 சிப்பந்திகளையும் தொடர்ந்து விமானத்திலேயே சிறை வைத்துள்ளனர்.

சன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் 737 விமானம் டார்பர் பகுதியில் உள்ள நியாலா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் கார்டோமுக்கு கிளம்பியது. அதில் 95 பயணிகளும், 2 விமானிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் கிளம்பியவுடன் அதை பயணிகள் போர்வையில் இருந்த 2 சூடான் விடுதலை ராணுவம் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தினர். கடத்திய தீவிரவாதிகள் அதை பிரான்சுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர்.

ஆனால், விமானத்தில் போதிய எரிபொருள் இல்லை என விமானிகள் கூறவே, அதை எகிப்தில் தரையிறக்க உத்தரவிட்டனர். ஆனால், விமானம் தரையிறங்க எகிப்து அனுமதிக்கவில்லை.

இதையடுத்து லிபியாவில் தரையிறக்க விமானிகளுக்கு தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். எரிபொருள் இல்லாத நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் அதை தனது நாட்டில் தரையிறக்க லிபியா அனுமதித்தது.

இதையடுத்து லிபியாவின் குப்ரா ராணுவ விமான தளத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த தீவிரவாதிகளுடன் லிபிய அரசு பேச்சுவார்த்தைக்கு முயன்றது. ஆனால் பேச்சு நடத்த மறுத்துவிட்ட அவர்கள், விமானத்தை பிரான்சுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், உடனே எரிபொருளை நிரப்ப வேண்டும் என விமானிகள் மூலமாக தெரிவித்தனர்.

தரையிறங்கிய விமானத்தின் கதவுகளைக் கூட தீவிரவாதிகள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் ஏர் கண்டிசன் சிஸ்டம் முடங்கிவிட்டதால் பல பயணிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கியுள்ளதாக விமானி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நீண்ட நேர முயற்சிகளுக்குப் பின் பேச்சுவார்த்தைகளுக்கு முன் வந்த தீவிரவாதிகள், லிபியாவின் கோரிக்கையை ஏற்று பயணிகள் அனைவரையும் விடுவித்தனர்.

ஆனால், 2 விமானிகளையும் 5 சி்ப்பந்திகளையும் தொடர்ந்து பயணக் கைதிகளாய் வைத்துள்ளனர்.

இந்த சூடான் விடுதலை ராணுவம் இயக்கத்தின் தலைவரான அப்துல் வாகித் முகம்மத் நூர் நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனது அமைப்பினர் யாரும் விமானக் கடத்தலில் ஈடுபடவில்லை என அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு போன் மூலம் கொடுத்த பேட்டியில் நூர் தெரிவித்துவிட்டார்.

டார்பர் பகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சூடான் விடுதலை ராணுவம் அமைப்பினருக்கும் அரசு ஆதரவு பெற்ற அரேபிய தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. மேலும் சூடான் ராணுவமும் விடுதலை இயக்கப் படையினரை தாக்கி வருகிறது.

2003ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த சண்டையி்ல் 3 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 22 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கானவர்கள் ஐ.நா. அமைத்துள்ள முகாம்களில் தங்கி வாழ்கின்றனர். உலகின் மிகப் பெரிய அகதி முகாமாக விளங்கும் இந்தப் பகுதியில் வசிப்போருக்கு போதிய உணவோ, நீரோ, இருப்பிடமோ இல்லை. இதனால் வாரந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் பலியாகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+