மதக் கலவரம் தூண்டுபவர்களுக்கு கடும் தண்டனை: பிரதமர்
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக மதக் கலவரங்கள், பயங்கரவாதச் செயல்கள், உயரும் விலைவாசி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
ஒரிஸ்ஸா மற்றும் கர்நாகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருவது இந்தியாவின் மதச் சார்பின்மை மற்றும் அமைதிக்கு கடும் பங்கம் விளைவித்துள்ளது. இத்தகைய செயல்களுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.
நாட்டில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மதக் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிவினை சக்திகளின் வேலைதான் இது. இரும்புக் கரம் கொண்டு அவற்றை அடக்குவதுதான் நம்முன் உள்ள ஒரே சவால்.
நவீன ஆயுதங்கள், கொரில்லா போர் முறைகள் என்று கொடூரத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்.
இன்று உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும் நம் நாட்டை சீர் குலைக்கவே இத்தகைய செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
மதக் கலவரத்துக்குக் காரணமானவர்களை அடக்குவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு அரசுத் தரப்பில் சட்ட மீறல்கள் இல்லாமல் இருப்பதும் அவசியம் என்றார்.
முன்னதாக, பல்வேறு மட்டங்களிலும் ஸ்திரத்தன்மையை இந்த அரசு இழந்துவிட்டதாகவும், விலைவாசி, பணவீக்கம் போன்றவை கட்டுக்குள் வராமல் போய்விட்டதாகவும் எதிர்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின. அதைத் தொடர்ந்து கார சார விவாதங்கள் நடைபெற்றன.