சத்யம்: நிர்வகிக்க நாராயணமூர்த்தி, பிரேம்ஜி தலைமையில் குழு- முதல்வர் கோரிக்கை
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 53 ஆயிரம் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி, டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ராமதுரை ஆகியோரைக் கொண்ட உயர் மட்டக் குழுவை உடனடியாக அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், நமது இப்போதையை, உடனடி கவலை சத்யம் நிறுவனத்தின் 53 ஆயிரம் ஊழியர்கள்தான்.
இந்த மாபெரும் ஊழல் விவகாரம் குறித்து சட்டம் தனது கடமையை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதற்குத்தான் முக்கிய முன்னுரிமை கொடுக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.
அதேசமயம், இந்த நிறுவனத்துடன் கான்டிராக்ட் வைத்திருந்த அனைவரும் தங்களது கான்டிராக்டுகளை உடனடியாக ரத்து செய்யும் உரிமை உடையவர்கள். அப்படி நடந்தால் அது சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் அப்பாவி ஊழியர்களையும், பங்குதாரர்களையும்தான் அது பெரும் பாதிப்புக்குள்ளாக்கும்.
எனவே அப்படி ஒரு அபாயகரமான நிலை உருவாகி விடாமல் தடுக்கும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பத்துறையில் அனுபவம் வாய்ந்த நாராயணமூர்த்தி, ஆசிம் பிரேம்ஜி, ராமதுரை போன்றவர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைத்து, அவர்கள் வசம் சத்யம் நிறுவனத்தின் நிர்வாகத்தை விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழந்து விடாமல் தடுக்க முடியும். அவர்களிடம் நமது தகவல் தொழில்நுட்பத்துறை குறித்த அவ நம்பிக்கை வந்து விடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜு அளித்துள்ள வாக்குமூலம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அதன் தலைமையிடம் ஆந்திர மாநிலமாக அமைந்திருப்பதால், நாங்கள் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார் ரெட்டி.
இந்தக் கடிதத்தின் நகல்களை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார் ரெட்டி.