இன்டர்நெட் விழிப்புணர்வு-தமிழகத்தை கலக்கும் கூகுள்
சென்னை: தமிழகத்தில் இன்டர்நெட் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் 'கூகுள் பஸ்' மூலம் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த டெமோ பஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் இன்டர்நெட் படு சாதாரணமான விஷயம். மூச்சுக் காற்றுக்கு சமமாக அங்கு இன்டர்நெட் பயன்பாடு உள்ளது.
ஆனால் உலகின் பிற பகுதிகளில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதே உண்மை. இதை மனதில் வைத்து இந்தியாவில் இன்டர்நெட் உபயோகம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், கூகுள் பஸ் என்ற விளக்கப் பேருந்து உலாவை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
கடந்த வாரம்தான் இந்த டெமோ பஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்டர்நெட் என்றால் என்ன, இதனால் என்னென்ன பலன்கள் உள்ளன என்பதை இந்த விளக்க பஸ்சில் அழகாக எடுத்துரைக்கின்றனர்.
இன்டர்நெட் உபயோகம் குறித்து நேரடி விளக்கமும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல நகரங்களில் இந்த கூகுள் பஸ் உலா வந்து கொண்டுள்ளது.
கல்வி, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் இன்டர்நெட்டின் பயன்பாட்டையும் அழகாக விளக்கம் அளிக்கின்றனர்.
இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவதை என்பதை மக்களே நேரடியாக செய்து பார்க்கவும் அனுமதிக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது. சர்ச் என்ஜினின் செயல்பாடு, இமெயில் அனுப்புவது, பெறுவது, ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் இன்டர்நெட் தொடர்பான பிற உபயோகங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.
சென்னையில் கிளம்பிய இந்த கூகுள் பஸ் உலா, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, பொள்ளாச்சி என பயணித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது.
மார்ச் மத்தியில், கூகுள் பஸ் பயணம் முடிகிறது. அதற்குள் 12 நகரங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கூகுள் இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தலைவர் பிரசாத் ராம் இதுகுறித்துக் கூறுகையில், இன்டர்நெட்டின் சக்தியை, அதன் உபயோகத்தை அனைவரும் உணர்ந்து, அறிந்து அனைவரும் அதை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
இன்டர்நெட் அனுபவத்தை மக்கள் ஓரளவு பெற்று விட்டாலும் கூட அதை தொடர்ந்து பயன்படுத்த ஆர்வம் கொள்வார்கள் என்பது எங்களது நம்பிக்கை. அதுவே எங்களது நோக்கமும் கூட. எனவேதான் இந்த கூகுள் பஸ் மூலம் இன்டர்நெட் அனுபவத்தை அவர்களுக்கு பரிச்சயப்படுத்தும் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
மீண்டும் இன்டர்நெட்டை பயன்படுத்த மக்கள் முனையும்போது அவர்களுக்கு மட்டுமல்ல கூகுளுக்கும் கூட அது பயன் தரும். மேலும் விளம்பரதாரர்களும் கூகுள் பக்கம் அதிக அளவில் திரும்புவார்கள் என்பதும் எங்களது நம்பிக்கை என்றார் பிரசாத் ராம்.