நாடகமாடும் கருணாநிதி-வைகோ, சிபிஎம்: சிபிஐ நடுநிலை
சென்னை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பலியாவதற்கு முழு காரணமான காங்கிரசையும், திமுகவையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கோரி முதல்வர் கருணாநிதி இன்று தமிழகத்தில் அழைப்பு விடுத்துள்ள முழு வேலை நிறுத்தத்துக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழின துரோகம் செய்த காங்கிரசுக்கும், திமுகவுக்கும் மக்கள் மரண அடி கொடுக்கப் போவதால் அதைத் தவிர்த்து விடலாம் என்று மனப்பால் குடித்தவராக திடீரென்று தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்து அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கேட்டுள்ளார் கருணாநிதி.
இலங்கையில் போரை நிறுத்தாமல் சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லத் திராணியற்ற கருணாநிதி தமிழர்களை ஏமாற்றும் ஆஷ்டானபூபதி ஆகிவிட்டார்.
ஈழத் தமிழர்களைக் கொன்ற மாபாதகத்துக்கு முழுக்க, முழுக்கக் காரணமான காங்கிரசையும், திமுகவையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்ற மதிமுக கருணாநிதியின் கபட நாடகத்துக்கு துணை போகின்ற தவறை ஒரு போதும் செய்யாது.
கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதிக் கொண்டு நடத்துகின்ற வஞ்சக ஏமாற்று வேலை ஆகும். மதிமுக திட்டமிட்டப்படி ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கலிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்.
கறுப்பு கொடி போராட்டம்...
ஈழத்தில் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் இத்தகைய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்க வரும் 24ஆம் தேதி அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழகம் எங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறப்போர் நடத்த உள்ளோம்.
படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக அன்று மாலை 6 மணிக்கு தாங்கள் இருக்கும் இடங்களிலேயே தமிழ் மக்கள் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும் வேண்டிக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
கருணாநிதியின் கபட நாடகம்... வரதராஜன்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான அழுத்தமான குரலை இந்திய அரசு ஐநா சபையில் ஒலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும் இதர ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.
ஆனால் திமுக பங்கு பெற்றுள்ள மத்திய அரசு இன்று வரையிலும் அந்த நியாயமான கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.
இந்தச் சூழலில் நாளை பொது வேலை நிறுத்தம் என்று திடீரென தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அப்பட்டமான நாடகம் ஆகும்.
மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள திமுக மத்திய அரசிற்கு எதிராக வேலை நிறுத்தம் அறிவிப்பது விந்தையிலும் விந்தை. இத்தகைய கபட நாடகங்களால் இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றவும் முடியாது, தமிழ்நாட்டு வாக்காளர்களை ஏமாற்றவும் முடியாது.
கலைஞரின் கபட நாடகத்திற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்பது உறுதி என்றாகிவிட்ட நிலையில், தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் கடைசி ஆயுதமாக இலங்கைப் பிரச்சனையைக் கலைஞர் பயன்படுத்துகிறார்.
ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை-தா.பா:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவையில் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும், சில அரசியல் கட்சிகள்தான் வேண்டும் என்றே இந்த பிரச்சினையை கிளப்பி வருவதாகவும், தேர்தலில் எந்த பாதிப்பும் வராது என்றும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து முழு வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறும்போது, பொதுவேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்ததன் அவசியம் என்ன?.
பொதுவேலை நிறுத்தத்தை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ஆனால் இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தப்படும்வரை எங்களுடைய கோரிக்கையை தொடர்ந்து வற்புறுத்துவோம்.
ராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இதுவரை இந்தியா சொல்லவும் இல்லை. நடவடிக்கை எடுக்கவும் இல்லை. முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி சர்வகட்சி கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரையும் நேரில் சந்தித்து வற்புறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இப்போது இலங்கை தமிழர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. தேர்தலுக்காக தமிழக முதல்வர் அறிவித்துள்ள கடைசி முயற்சிதான் இந்த பொதுவேலை நிறுத்தம் என்று நான் கருதுகிறேன். ஆனால் இதுவும் பலனை தரப்போவதில்லை.
இலங்கையில் உண்மையில் நடைபெறுவது என்ன? என்று உண்மையான தகவலை கூட சேகரிக்க முடியவில்லை. இதற்காக இந்தியாவும் நடவடிக்கை எடுக்கவில்லை. உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும், இலங்கை அரசு பாசிச நடவடிக்கையை கைவிட மறுக்கிறது.
இலங்கை தமிழர்கள் தங்களது உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடுகிறார்கள். விடுதலைப்புலிகள் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்களே தவிர, மக்களை கேடயங்களாக பயன்படுத்தவில்லை. பிரபாகரனை இலங்கை அரசு பிடிக்க முடியாது. அவர் சரண் அடையவும் மாட்டார். தற்கொலை செய்யவும் மாட்டார். ஆனால் போர் வியூகத்தை மாற்றுவார் என்றார் பாண்டியன்.