விமானம் தயாரித்த சென்னை ஏரோனாடிக்ஸ் கல்லூரி மாணவர்கள்
சென்னையி்ன் புறநகர் பகுதியில் இருக்கும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் ஏரானாடிக்கல் என்ஜினியரிங் பிரிவு மாணவர்கள் ஜஸ்டின் ஜார்ஜ், கிஷோர் மற்றும் கல்யாண் சிரஸ்தா. இவர்கள் மூவரும் இணைந்து தங்களது புராஜக்ட்டாக குட்டி விமானம் ஒன்றை தயாரித்து சக மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்ய கூடிய இந்த விமானத்தை அவர்கள் தங்களது சொந்த பணம் சுமார் ரூ. 5 லட்சம் செலவில் தயாரித்துள்ளனர். இந்த விமானத்துக்கு மாருதி எஸ்டிம் காரின் என்ஜினை உபயோகித்துள்ளனர்.
இது குறித்து ஜஸ்டின் என்ற மாணவர் கூறுகையில், நாங்கள் வடிவமைக்க நினைத்து விமானத்துக்கு 3000 ஆர்பிஎம் கொண்ட என்ஜின் போதும் என்பதால் 6,000 ஆர்பிஎம் திறன் கொண்ட மாருதி எஸ்டீம் என்ஜினை பயன்படுத்தினோம்.
விமானத்தின் எடையை குறைக்க விசேஷ அலுமினிய தகடுகளை டங்ஸ்டன் வாயு மூலம் வெல்டு செய்து ஒட்ட வைத்தோம். இதில் எங்களுக்கு உதவிய தச்சர், படிப்பு விஷயம் என்பதால் எங்களிடம் காசு வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
விமானத்தின் சக்கரங்களை லேசான எடை கொண்ட சரக்கு விமானத்துக்குரிய மாடலில் செய்தோம். இறக்கைகளை லேசான அலுமனிய தகடுகளை கொண்டு அமைத்தோம். இது மொத்தத்தில் பழைய அம்பாசிடர் காரின் உருவத்தை ஒத்துள்ளது என்றார்.
மாணவர் கல்யான் கூறுகையில், விமானத்தில் வேகம் காட்டும் கருவி, உயரம் காட்டும் ஆல்டிமீட்டர், ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனம் மற்றும் கைராஸ்கோப் ஆகியவற்றை பொருத்த வேண்டியுள்ளது. அப்போது தான் டிஜிசிஏவின் அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு மேலும் ஒரு லட்சம் வரை செலவாகும் என்றார்.
தற்போது அந்த மாணவர்கள் இந்த விமானத்தை தங்களது கல்லூரி கால்பந்து மைதானத்தில் இயக்கி வருகின்றனர்.
மாணவர்களின் புராஜக்ட் கைடான ஆசிரியர் வெங்கடநாராயணன் கூறுகையில், இந்த விமானம் நன்றாக பறக்க கூடிய வகையில் இருக்கிறது. அவர்கள் ஏரோனாடிக்கல் விதிமுறைப்படி தான் இதை வடிவமைத்துள்ளனர் என்றார்.