ரூ. 1,334 கோடி செலவிலான ஒகேனக்கல் குடிநீர் திட்டம் அக்டோபரில் துவக்கம்
தமிழகத்தின் மிகப்பெரிய நதியான காவேரி, தர்மபுரி மாவட்டம் மூலமாக தான் தமிழகத்துக்குள் நுழைகிறது. ஆனால், காவிரி நதியின் மூலம் இந்த மாவட்டத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
மக்கள் குடிநீருக்காக மிகவும் திணறி வருகின்றனர். விவசாயிகளும் போதிய நீர் இன்றி கவலையடைந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் போன்ற இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழ் தோண்டிவிட்டனர். இன்னும் சிறிது தோண்டினால் பெட்ரோல் கூட கிடைத்துவிடும். ஆனால், தண்ணீர் கிடைப்பதற்கான அறிகுறி மட்டும் தென்படுவதில்லை.
மேலும் இப்பகுதியில் கிடைக்கும் நீரில் புளோரைடு அதிகம் கலந்திருப்பதால் மக்கள் எலும்பு தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர். இவர்களது எலும்புகளால் ஒரு சிறு விபத்தை கூட தாங்கி கொள்ள முடிவதில்லை.
இதன் விளைவாகத் தோன்றியதுதான் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடந்த 54 ஆண்டுகளாக இந்த நிறைவேற்ற வேண்டும் என முயற்சித்து வருகிறது. ஆனால், இது இன்று வரை நடந்தபாடில்லை.
எம்ஜிஆர் ஆட்சியின்போது ரூ. 100 கோடியாக கணக்கிடப்பட்டிருந்த திட்ட செலவு தற்போது ரூ. 1,334 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்துக்கு இறுதியாக முதல்வர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதற்கான நிதியை தமிழக துணை முதல்வர் ஸ்டாலினி, ஜப்பான் சென்று திரட்டியுள்ளார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 26, 2008ல் முதல்வர் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் இடையில் அரசியல் குறுக்கிட்டு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறை, கலவரம் வெடித்தது. இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கர்நாடகத்தில் தேர்தல் முடியும் வரை காத்திருப்பதாகவும், திட்டம் அதுவரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து விட்டது.
இந்த திட்டத்துக்கான இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவை, தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும், தர்மபுரியில் ஒரு அலுவலகத்தையும் துவக்கியுள்ளது.
இது குறித்து சுப்ரியா சாஹூ கூறுகையில்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து நீர் வழங்கும் திட்டம் ரூ. 1,334 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தினால் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6 ஆயிரத்து 755 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.
இந்த திட்டப்பணிகள் அக்டோபர் மாதம் துவங்கி வரும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு ஜப்பான் நிதி நிறுவனம் ரூ.1165 கோடியும், தமிழக அரசு ரூ.165 கோடியும் நிதி உதவி அளிக்கின்றன என்றார்.