சிறப்பு பொருளாதார மண்டலம்-3வது இடத்தில் தமிழகம்
நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் இன்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 49 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சராசரி நிலப்பரப்பு 81 ஹெக்டேர்கள் மட்டுமே. எனவே மித மிஞ்சிய வகையில் பெரிய அளவிலாக நிலப் பகுதிகளை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆக்கிரமிக்கவில்லை.
சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சிக்காக கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு செய்யவில்லை. சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்பட்டபோது கூட சில நில உரிமையாளர்களின் நலனை அரசு முழுமையாக உணர்ந்து, அந்த நிலத்துக்கான நியாயமான விலையைச் கொடுக்க முன் வந்துள்ளது.
தொழில் பூங்கா அமைக்கும் போது வேளாண்மைக்கு அல்லாத அல்லது குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட நிலங்கள் மட்டுமே நில எடுப்புக்காக கண்டறியப்படுகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தொழில்கள் அமைய அரசு எடுத்த முனைப்பான முயற்சியின் பயனாக மாநிலத்தின் இதரப் பகுதிகளிலும் தனியார் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, கடலூர் மாவட்டங்கள் புதிய தொழில் வளர்ச்சி மையங்களாக மாறியுள்ளன.
பொன்னேரியில் ஆசியாவின் மாபெரும் கப்பல் தளம்..
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த முதலீடு ரூ.4,675 கோடி. சுமார் 10,000 பேருக்கு அதில் நேரடியாகவும், மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த பணி முடிவடையும் போது ஆசியாவிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications