போபாலில் மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை- கொந்தளிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 152 பெண்களுக்கு, முதல் அமைச்சரின் கன்னியாதானம் திட்டத்தின் இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கல்யாணம் தொடங்கி தாலி கட்ட சில நிமிடங்கள் இருந்தபோது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அதிகாரிகளும், அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த அனைத்து மணமகள்களுக்கும் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் சோதனைக்கு அரசு உத்தரவிட்டது.
அந்த சோதனையின்போது 14 பெண்கள் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் ஒரு பெண் 18 வயது நிரம்பாதவர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் விலக்கப்பட்டனர். அதன் பின்னர் மீதம் இருந்த 138 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
மத்தியப் பிரதேச அரசின் இந்த இலவச திருமணத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 5000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.
கல்யாணத்தின்போது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், 14 பேர் கர்ப்பமாக இருந்ததும் ஊரில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கல்யாணமானவர்களை பணத்துக்கு ஆசைப்பட்டு புரோக்கர்கள் உள்ளே நுழைத்து விட்டதாகவும், அரசு மோசடி செய்வதாகவும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் கல்யாணத்தின்போது சலசலப்பு ஏற்பட்டது.
அதேசமயம், அனைத்துப் பெண்களுக்கும் கன்னித்தன்மை சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதால் மணமகள்களும், அவர்களின் குடும்பத்தினரும் கோபமடைந்தனர்.
இதுகுறித்து ஒரு மணமகள் கூறுகையில், என்னிடம் கன்னித்தன்மை சோதனைக்குப் போகுமாறு அதிகாரி ஒருவர் கூறியபோது நான் போக மறுத்து விட்டேன். ஆனால் சோதனையை நடத்தி நான் கன்னிப் பெண்தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மண்டபத்திற்குள் விடுவோம் என்று அவர் கட்டாயமாக கூறியதால் நான் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டேன் என்றார்.