அல்-கொய்தா ஆகிவிட்ட பாஜக: ராம் ஜேத்மலானி
டெல்லி: பாஜக கிட்டத்தட்ட அல்-கொய்தா மாதிரி மாறிவிட்டதாக நாட்டின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டது குறித்து சிஎன்என்-ஐபின் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில்,
பாஜகவில் உட்கட்சி ஜனநாயகத்துக்கு இடமேயில்லை. அந்தக் கட்சியும் கிட்டத்தட்ட அல்-கொய்தா மாதிரி ஆகிவிட்டது. மதக் காரணங்களைச் சொல்லி அல்-கொய்தா 'பத்வா' கொடுப்பது மாதிரி ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக பத்வா கொடுத்துள்ளது.
நாடு பிளவுபட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எப்படியெல்லாம் காரணமாக இருந்தார்கள் என்பதைத் தான் ஜஸ்வந்த் சி்ங் தனது புத்தகத்தி்ல் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். இதை பாஜக அழகாக பயன்படுத்தி காங்கிரசை வறுத்து எடுத்திருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு ஜஸ்வந்த் சிங்கையே நீக்கியிருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம். பாஜகவுக்கு தேர்தல் தோல்வியை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது தான்.
ஒருவருக்கு அரசியல் சட்டம் உரிமையை, எழுத்துச் சுதந்திரத்தை எப்படி கட்சி பறிக்கலாம்?. ஜஸ்வந்தை நீக்கியது ஜனநாயக விரோதமான செயல்.
அப்படி ஜஸ்வந்த் என்ன தவறாக சொலிவிட்டார். நடந்ததைத் தானே எழுதியிருக்கிறார். ஜின்னா மதசார்பற்ற நபராகத்தான் இருந்தார். மத விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்று காந்தியிடம் திரும்பத் திரும்பச் சொன்னவர் ஜின்னா. கிலாபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தபோது அதை ஜின்னா எதிர்த்தார். அரசியலில் மதத்தை கலக்காதீ்ர்கள் என்றார் ஜின்னா.
பாஜகவில் இருப்பதால் இதையெல்லாம் சொல்ல ஜஸ்வந்த் சிங்குக்கு உரிமையில்லாமல் போய்விடுமா? என்றார் ஜேத்மலானி.
எனக்கும் புரியவில்லை.. ஸ்வபன்தாஸ் குப்தா:
மூத்த பத்திரிக்கையாளரும் பாஜக ஆதரவாளருமான ஸ்வபன்தாஸ் குப்தா கூறுகையில்,
பாஜகவில் இருந்தாலும் ஜஸ்வந்த் சிங் வித்தியாசமானவர். அவருக்கு என தனிப்பட்ட கொள்கைகள் உண்டு. ஒருவர் வரலாற்று நிகழ்ச்சிகளை, நடந்த விஷயங்களை புத்தகமாக எழுதுகிறார் என்றால் அதைத் தடுக்கும் அளவுக்கு பாஜக ஏன் தரம் தாழ்ந்துவிட்டது என்று தான் புரியவில்லை. அது தான் எனக்கு வருத்தம். அந்தப் புத்தகத்தில் உள்ளதில் பெரும்பாலான விஷயங்களை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், கருத்து சொல்லக் கூட கட்சியில் உரிமை இல்லையா?.
61 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேசப் பிரிவினையால் ஏற்பட்ட அரசியல் சிக்கல்களை நாம் இப்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் புத்தகம், கருத்துக்கள் மூலமாக விவாதிப்பதில் என்ன தவறு என்றார்.